tamilnadu

img

மருத்துவ மாணவர்களின் 10 விழுக்காடு உள்இடஒதுக்கீட்டையும் தடுக்கும் மோடி அரசு....

சென்னை:
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு என்பது நீட் தேர்வின் தகுதியை நீர்த்து போக செய்யும் என மத்திய அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இதேபோல் புதுவை மாநிலத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் 10 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.இந்நிலையில், புதுவையை சேர்ந்த மாணவி திவ்யதர்ஷினி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், புதுவையில் மருத்துவப் படிப்பில் சேரக் கூடிய அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.இந்த நிலையில், இவ்வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன்பு வியாழனன்று(ஜன.21) விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் உள்துறை சார்பில் தாக்கல் செய்யப் பட்ட பதில் மனுவில், “ஒரே நாடு ஒரே தகுதி” என்ற அடிப்படையில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாகவும் ஆனால் புதுவையில் கொண்டு வரப்படவுள்ள சட்டம் என்பது நீட் தேர்வின் தகுதியை நீர்த்து போக செய்யும். தமிழ்நாட்டில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் தொடர்பாக தங்களது கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை. புதுவை அரசின் சட்டம் குறித்து முடிவு செய்ய 6 வார கால அவகாசம் வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், இது மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் நடவடிக்கை என்றும், அரசு பள்ளி மாணவர்களை கொச்சைப் படுத்தும் நடவடிக்கை என்றும் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து 4 வாரங்களுக்குள் முடிவெடுத்து உரிய பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

;