பெண் என்றாலே கேலி கிண்டல்..! பெண்தானே... என்ன இருந்தாலும் நீ ஒரு பெண் தானே - என்ற ஏளனமான அல்லது ஏளனங்களுக்கெல்லாம் ஏளனமாக சில வார்த்தைகளை எங்காவது எப்போதாவது கேட்டிருப்போம். அல்லது பார்த்திருப்போம். இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது இந்த ஆணாதிக்க சமூக அமைப்புதான். என்னதான் விஞ்ஞானத் தொழில்நுட்ப வளர்ச்சி புரட்சியாக வெடித்தாலும் அதில் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக சாதனைகள் புரிந்திருந்தாலும் பெண்களை இரண்டாம்தர பிரஜையாக கருதுவது என்பதே இச்சமூக அமைப்பின் வேராக தொடர்கிறது. வருணாசிரம சித்தாந்தமோ கடவுளின் உடல் பாகங்களிலிருந்து தோன்றியதாக மற்ற வர்ணத்தார்களை குறிப்பிட்டதோடு பெண்ணை யும், தலித்களையும் கடவுளின் உடல்பாகங்களி லிருந்தே ஒதுக்கிவைத்து, அவர்கள் செய்த பாவங்களிலிருந்து தோன்றியவர்கள் என புறக்கணிக்கிறது. ஆனால் விஞ்ஞானமோ ‘பெண் இல்லையென்றால் மானுடமே இல்லை’ என்ற உண்மையை உரக்கக்கூறுகிறது. விஞ்ஞா னத்தை அறிந்தவர்களும், ஏற்றவர்களும் வரலாறு நெடுகிலும் பெண்ணுரிமையை வலியுறுத்தியே வந்துள்ளார்கள்.
வயதான தந்தைக்கு கோபம் வந்தால் கூட வயதான தாயைப் பார்த்து முதலில் நீ வீட்டைவிட்டு வெளியேறு என்பார். குடும்பச் சண்டைகளின் இறுதி அஸ்திரமே பெண்ணை வெளியேற்றுவதில் முடியும். ஏனென்றால் பெண்ணுக்கு உலகமே வீடுதான். ‘அடுப்பே திருப்பதி; வாசல்படியே வைகுந்தம்’ என்ற பழமொழியே அதன் அடிப்படைதான். ஆனால் தோழர் லெனின் அவர்கள், பெண்களே வீட்டை விட்டு வெளியேறுங்கள் என்று அறை கூவினார். அதன் பொருளையும் விளக்கினார். இதுவரை அவர்கள் சமைய லறையில் இருந்தது போதும். சமூக உற்பத்தியில் அவர்கள் பங்கேற்க வேண்டும். சமூக உற்பத்தி யில் ஈடுபடுகிறபொழுதுதான் பெண் அரசியல் அறிவையும் சமூக உணர்வையும் அடைகிறார். பெண்களின் பங்கேற்பில்லாத எந்த மாற்றமும் நாட்டுக்கோ வீட்டுக்கோ புரட்சிக்கோ கூட சாத்தியமில்லை என்றார். தந்தை பெரியார் அவர்களும் தமிழகத்தில் அதையே கூறி வந்தார்.
ஆம்! தமிழகத்தில் பெண்கள் முதல் முயற்சி யாக வீடு என்ற கூட்டிலிருந்து கிளம்பி சென்னை கோட்டை நோக்கி நடக்கத் துவங்கி யிருக்கிறார்கள். ‘சிறகுள்ள பறவைகளாக’ தங்களை உணரத் துவங்கிவிட்டார்கள். எத்தனை மகிழ்ச்சி அவர் களின் முகங்களில்.. இதுவரை காணப்படாத ஒரு புத்துணர்ச்சி அல்லவா அது..! பெண்கள் மீதான அனைத்து வன்முறைகளும் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிற நவம்பர் 25 உலகநாளில் வன்முறையில்லாத போதையற்ற மாநிலங்களாக தமிழகமும், புதுச்சேரியும் மாற்றப்பட வேண்டும் என்ற முழக்கங்களை முன்வைத்து வடலூரில் இருந்தும் திருவண்ணாமலையிலிருந்தும் வெள்ளை சிவப்பு சீருடையில் ஜனநாயக மாதர் சங்கத்தின் வீராங்கனைகள் அணிவகுத்து நடைபயணமாக கிளம்பிய அத்தருணங்கள் விவரிக்க இயலாத உணர்ச்சிகள் நிரம்பியதாக அமைந்திருந்தது.
திருவண்ணாமலைக்கு அது ஒரு புதிய காட்சி யாகவும் நிகழ்ச்சியாகவும் இருந்தது. தலையில் வெண்ணிற தொப்பியும் கையில் வெண்கொடியு மாக அலை அலையாக பெண்கள் வரத் துவங்கினார்கள். மாநிலத் தலைவர் வால ண்டினா தலைமையில் அக்குழு நடைபயண உறுதிமொழி ஏற்றுக்கொண்ட நிகழ்வில், ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ திரைப்பட இயக்கு னர் லெனின்பாரதி கலந்து கொண்டார். சினிமா இயக்குநர் என்பதால் அவர் கலந்து கொண்டாரா என ஒரு பத்திரிகையாளர், பயண வீராங்கனையிடம் கேட்டபோது அவர் பளிச்சென்று கூறினார், எங்கள் மாதர் சங்க கோரிக்கைகள் வெற்றிபெற வேண்டும் என்ற கருத்துக் கொண்டவரென்பதால் அவர் கலந்து கொண்டார் என்று. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிப்பீர்களா என்று அடுத்த கேள்வியைக் கேட்க அதே பெண் மீண்டும் பதிலளித்தார்: ‘‘நல்லாக்கேட்டிங்க... டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து போதை தமிழகமாக மாற்றிக் கொண்டிருப்பவரே அவருதானே...”
கேள்வி கேட்ட பத்திரிகையாளர் சிரித்த படியே நகர்ந்து விட்டார். அங்கு குழுமியிருந்த வீராங்கனைகள் வெறுமனே நடப்பவர்கள் அல்ல. விஷயங்களோடு நடப்பவர்கள். 17வயது இளம்பெண்ணிலிருந்து 71வயது மூதாட்டி வரை அப்பயணக்குழுவில் இடம் பிடித்திருந்தார்கள். கொளுத்தும் வெயிலில் அக்குழுவினர் வீர முழக்கத்தோடு கிளம்பினார்கள். பாலியல் வன்முறைக்கு தங்கள் புதல்விகளைப் பறி கொடுத்திருந்த இளம் அன்னையர்களே கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள். அவர்கள் கண்களில் கண்ணீரில்லை. ஆனால் நம்பிக்கை ஒளிவீசியது. திருவண்ணாமலையே திரண்டு நின்றதுபோல் நகரின் வழியெங்கும் மக்கள்கூட்டம் இப்பயணக்குழுவை வாழ்த்திக் கொண்டிருந்தது.
200 கிலோமீட்டர் தூரம் கடந்து சென்னை கோட்டையை அடைய வேண்டும். பெண்களால் நடக்கமுடியுமா? குடும்பம் என்ன ஆவது? யார் கவனிப்பார்கள்? என்ற கேள்விகளை 24 கிலோ மீட்டர் தூரத்தை ஒரே நாளில் அநாயாசமாக கடந்து எங்களால் முடியும் என்று நிரூபித்த பிறகே அமர்ந்தார்கள். அதிலும் மல்லவாடியிலிருந்து கொண்டம் பகுதிவரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டிருந்த மரங்களடர்ந்த வனப்பகுதியை இளம் மாலைப் பொழுதில் துளி அச்சமும் இல்லாமல் கடந்தார்கள். வழியெங்கும் இளைஞர்கள், குழந்தைகள், சீருடையணிந்த இக்குழுவினரின் நடைபயணத்தின் காரணங்களை அருகில் வந்து கேட்டுத்தெரிந்து கொண்டார்கள். சிலர் கரம்குலுக்கி மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். ஒரு நடுத்தரவயது பெண்மணி ஆவலாதியாக, நாங்கள்ளாம் வரலாமா என்று கேட்டார். குடிச்சி குடிச்சி நாசமாப் போறாக என்று ஒரு பெண்மணி யாரை நினைத்தோ திட்டிக் கொண்டே சென்றார்.
பள்ளிச்சிறுமிகள் உற்சாகத்தை அளவிட வார்த்தையே இல்லை. நீங்கள்ளாம் டீச்சரா என்றார்கள். இப்படியான கேள்விகள், மெளன மான புன்னகைகள் மது அரக்கனுக்கெதிரான பெண்களின் ஆத்திரமான வசவுகள் இவைகளைப் பார்த்த பயண வீராங்கனைகள் பரவசமான உணர்வையும் கால்வலி, முட்டிவலி, முதுகுவலி என அனைத்து வலிகளையும் மறந்த வர்களாய் வீறுநடைபோட்டு முன்னேறினார்கள். அல்லது அவ்வலிகள் அவர்களைவிட்டு விலகி வீறுநடைபோட்டு அகன்றது. இரவு 7 மணியளவில் நாயுடு மங்களத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு ஊரே திரண்டு வந்திருந்தது. ஒரு பெட்டிக்கடைக்காரர் அவராகவே முன்வந்து பிஸ்கட் பாக்கெட்டு களை அள்ளிக் கொடுத்த நிகழ்வு இப்பயணத்தின் வெற்றியை கட்டியம் கூறியது.
முதல் நாள் பயணம் அடுத்த நாளை உற்சாகப் படுத்தி அனைவரையும் புத்தெழுச்சி கொள்ளச் செய்தது. காலை உணவும் மதிய உணவும் கோவில் மண்டபங்களில், அதன் முன்புற தரைகளில், படிக்கட்டுகளில் நிகழ்ந்தபோது அதன் அனுபவங்கள் மிக சுவையானதாக இருந்தது. கிராமக் கோவிலைத் திறந்து பெண்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்ததோடு நல்ல விஷயங்கள் என்று பாராட்டி கடவுள் அருள் பாலிப்பார் என்றும் வாழ்த்தினார்கள்.
இடையிலிருக்கும் அன்புக்கும் சமூக உணர்வுக்கும் என்னபெயர் இருந்தால் என்ன?
சிபிஎம், சிபிஐ, விசிக, திராவிடர் கழகம் இன்னும் பல அமைப்புகள் நேரில் வந்து பெண்களுக்குத் தேவையான மருந்து, உணவுப் பொருள்களை வழங்கினார்கள். எதிரும் புதிரு மான காவல்துறையே சில குறிப்பிட்ட இடங்களில், ஆள் நடமாட்டம் குறைவான பகுதிகளில் பெண்கள் பின்தங்க நேரிடுகிறபோது அதனை முன்பகுதிக்குச் சென்று கவனப்படுத்தி அவர் களை இணைத்துச் செல்கிற வரை இருந்து பய ணத்தோடு வழிநடத்திய பாங்கும் வித்தியாச மானது தான். மழையும்வந்தது. நடையும் தொடர்ந்தது. போளூர் வரவேற்புக் கூட்டம் பேருந்து நிலையத்தை திணறச் செய்தது. இப்படி எல்லாத் தரப்பினரையும் வசீகரித்து விட்டது பெண்களின் நடைபயணம்.
பயண வீராங்கனைகளில் பலரும் உழைப்பாளிகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. தினசரி 130 ரூபாய் பீடி சுற்றினால் கிடைக்கும் வருமானத்தை இழந்தே சின்னத்தாய் நெல்லையிலிருந்து கலந்து கொண்டிருக்கிறார். ஆயிஷாபேகம் வருமானத்தில் தான் குடும்பம் நகர்கிறது. ஆனால் 10நாட்கள் அவர் இப்பயணத்தின் முக்கிய அங்கமாக மாறி உற்சாகமாக வீரநடை போடுவதே இயக்கத்தின் பெருமைமிகு வெற்றி. வீட்டு வேலை பெண் தொழிலாளிகள் 2 பேர் மாதம் 2000 ரூபாய் ஊதிய இழப்போடு பங்கேற்றிருக்கிறார்கள்.
இவர்களோடு முன்னாள் பேராசிரியர் சங்கரி, கருத்தோடு அவர்களது கரம் பற்றி அழைத்துச் செல்கிறார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின் அவர்களின் துணைவியார், இவர்களோடு திருப்பூர் இராமநாதபுரத்தை சேர்ந்த படித்து கொண்டிருக்கும் மாணவிகளும் அவர்களுக்கே உரிய துடிப்போடு வழியெங்கும் துண்டுப்பிரசுர விநியோகம் நடைபெற்று வருகிறது. அட என்னாங்க ஆம்பள... என்ற பாடலை ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும் ரசிகர் பட்டாளங்களை வழியெங்கும் உருவாக்கி வருகிறார் பாடகர் சேலம் வசந்தி. அவ்வப்போது ஆடலா பாடலா பொன்னுத் தாய், ராதிகா, ராணி, லட்சுமி, உஷாபாசி, வெண்மணி, தலைமையில் உற்சாகம் பொங்க கலைப் பயணமாகவும் மாறிவிடுகிறது. புனிதா என்ற திருவண்ணாமலை சகோதரி உடனுக்கு டன் மருத்துவராக மாறி யாருடைய வலிகளையும் தம் கரத்தால் தாங்கிக்கொள்கிறார்.
அனைத்திற்கும் மேலாக இவர்களை நடைபயணத்திற்கு அனுப்பிவைத்த அவர்களது வீட்டு ஆண்கள் குழந்தைகள் மிகவும் பாராட்டிற்குரியவர்கள். ஓடி ஓடி இவர்கள் பயணத்தை வெற்றிகரமாக்கும் சிவக்குமார் போன்ற தோழர்களின் உதவி பேரன்பானது. போதையற்ற வன்முறையற்ற தமிழகத்தை நாம் உருவாக்குவோம்... நாம்தான் உருவாக்குவோம் என்ற நம்பிக்கை பிறக்கிறது. # நடை என்பது ஒரு சொல் அல்ல. அர்ப்பணிப்பு நிரம்பிய வீரச் செயல் என்பதை பெண்கள்படை சொல்லாமல் சொல்கிறது.
டை ரி க் கு றி ப் பு க ள்
நேற்றைய தினம் (நவம்பர் 25 முதல் நாள்) 18.5 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தோம். வன்முறை எதிர்ப்பு - போதை எதிர்ப்பு என்ற கோஷங்களை கேட்டவுடன் பல இடங்களில் பெண்கள் ஓடி வந்து எங்களுடைய கைகளைப் பிடித்துக் குலுக்கினர். கிழங்கு விற்று கொண்டிருந்த பெண்மணி ஒருவர் கிழங்கை எங்களுக்கு பரிசாக அளித்தார். உற்சாகமான வரவேற்பு எங்களை கடந்து போன பள்ளி வேன்களில் இருந்துதான்... ஒரு ஸ்கூல் வேனில் இருந்து எங்களை பார்த்தவுடன் சிங்கப் பெண்ணே என்ற பாடல் தானாய் கிளம்பியது.. சகோதர அமைப்புகளின் உற்சாகமான வரவேற்பும் உபசரிப்பும் எங்களது களைப்புக்கு அருமருந்தாய் அமைந்தன. இரவு, மண்டபத்தை அடையும் முன்னரே கால்கள் கெஞ்சின.. தோழர்கள் முடக்கத்தான் சூப் சூடாய் கொடுத்து சோர்ந்து போன மூட்டுகளை இதமாக்கினர். படுத்தது தான் தெரியும்... விடிந்துவிட்டது. இரண்டாம் நாள் பண்ருட்டியில் துவங்கி தற்போது அண்ணாகிராமத்தில் விச, விதொச வரவேற்பு...நடந்த கால்கள் பல, புதுவை கலைஞர்களின் பாடலுக்கு ஆடி கொண்டிருக்கின்றன. பயணம் தொடர்கிறது.
இரண்டாவது நாள் உற்சாகமாய் முடிந்தது. நிறைவு நிகழ்ச்சியில் கடலூர் நகரத்தில் குழந்தைகள் பூத்தூவி வரவேற்றார்கள். ஒரு முதியோர் அமைப்பு பத்தாயிரம் ரூபாய்க்கான மருந்துகளை அளித்தார்கள். நகர எல்லையில் இருந்தே பேண்ட் வாத்தியங்கள் முழங்கி வரவேற்றன. அதற்கு முன்னதாக கடலூர் ஒன்றியம் அமர்க்களமான வரவேற்பு அளித்தது. பாதிரி குப்பத்தில் சிறப்பான கூட்டம். அநேகமாக இரண்டு பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான மக்கள் ஆவலோடு இந்த நடைபயணத்தை பார்த்தார்கள். காலையில் பண்ருட்டியில் இருந்து கிளம்பி அண்ணாகிராமம் வரவேற்பு, பிறகு மேல்பட்டாம்பாக்கம் வழியாக நெல்லிக்குப்பம், உணவு. இடையில் ஒரு கிருத்துவ அமைப்பு அனைவருக்கும் குளுக்கோஸ் வழங்கியது. வழியெங்கும் மக்கள் பலர் வாகனத்தை நிறுத்தி நோட்டீஸ் கேட்டு வாங்கியது சிறப்பான அம்சம். - உ.வாசுகி
இவர்கள் நடக்கிறார்கள்... ஆறு மாதத்திற்கு முன்பு கோவை துடியலூர் பன்னிமடையில் தனது 5 வயது குழந்தை கொடூரன் ஒருவனால் பாலியல் பலாத்காரம் செய்து கொலைசெய்யப்பட்ட பயங்கரத்திற்கு காரணமான சமூக அநீதிக்கு எதிராய் நீதி கேட்டு நடக்கிறார்கள்... என் குழந்தைக்கு கொடுமை நடந்துவிட்டது... என்னால் அதிலிருந்து வெளியில் வர முடியவில்லை என்று அழுது புலம்பவில்லை இந்தத் தாய். இனி ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு பலியாகக் கூடாது என நடக்கிறாள்... காடும் மலைகளும் கல்லும் முள்ளும் எனக்கு ஒரு பொருட்டல்ல என சபதம் ஏற்று நடக்கிறாள்... தமிழகத்தில் போதைக்கும் வன்முறைக்கும் தமிழக அரசாங்கமே முடிவு கட்டு என முரசறைந்து நடக்கிறாள்... எனக்கு ஏற்பட்ட கடுந்துயரில் உடன் நின்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் காட்டிய பாதையில் போராளியாய் உருவானேன் என்று சொல்லி நடக்கிறாள்... டிசம்பர் 4 அது வெறும் நாள் மட்டுமல்ல, ஆட்சியாளர்களின் ஆட்டங்களை அசைக்கும் நாள் என்று சொல்லி நடக்கிறாள். தமிழகத்து பெண்களின் நம்பிக்கை நட்சத்திரம் மாதர் சங்கம் அழைக்கிறது கோட்டையை நோக்கி என்று அறைகூவி அனைவரையும் அழைத்து நடக்கிறாள்.
#பாலசௌந்தரி பி.எஸ்.சி..
ஜனநாயக மாதர் சங்கம் நடத்துகின்ற நடைபயணம் போளூர் பகுதிக்கு வந்தபோது நடை பயணத்தால் ஈர்க்கப்பட்டு இன்று நாம் இருக்கும் இடம் தேடி வந்து நானும் உங்களோடு இனிவரும் ஏழு நாட்கள் உங்கள் பயணத்தில் கலந்து கொள்கிறேன் என்று நடந்து வருகிறார்... -- ராதிகா
“இது என்னம்மா கூட்டம்? நீங்கல்லாம் எந்த ஊரு?” - நவம்பர் 24 இரவு வடலூர் பேரூராட்சி திருமண மண்டபத்தில் எங்கள் பைகளை வைத்ததும், அங்கிருந்த துப்புரவு பணியாளர் பெண்கள் மூவர் கேட்டனர்.
‘‘பெண்கள், குழந்தைகள் மீது நடக்கும் வன்முறைகளை எதிர்த்தும், டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லியும், சென்னை வரை நடந்தே போறோம்மா”ன்னு சொன்னதும், அவங்களுக்கு ஒரே சந்தோசம்.
தினமும் எங்க சமணர்மலைக்கு பின்னாடி, சூரியன் தூங்கப் போவாரு. இன்னிக்கு எங்க போவாருன்னு பார்த்திட்டே நடந்தேன்.
இதோ, பண்ருட்டியில், முந்திரி மரக்காட்டுக்குள்ள தூங்கப் போயிட்டாரு.
இதோ, பண்ருட்டியில், முந்திரி மரக்காட்டுக்குள்ள தூங்கப் போயிட்டாரு.
எழுபத்தைந்து குடும்ப அட்டைகள் இருக்கிற அந்த கிராமத்தில் பதினொரு சாராயக்கடைகள். - - பர்வத வர்த்தினி
மேம்பட்டாவாக்கத்தில் ரேவதி என்ற பெண் தன் 3 குழந்தைகளுடன் நடைபயண குழுவை சந்தித்தார். அவருடைய கணவர் சுப்பிரமணி பொய்புகாரின் அடிப்படையில் காவல்நிலையம் அழைத்து சென்று அடித்து கொல்லப்பட்டவர். ஆனால் அவர் திருட்டில் ஈடுபட்டதாக சொல்லப்பட்ட அன்று வேளாங்கண்ணி கோவிலில் இருந்தது சிசிடிவி கேமிரா ஆய்வில் பிறகுதான் தெரிந்தது. மாதர் சங்கத்தின் நடைபயணம் வெற்றிபெற வேண்டும் என்றும் என்னைப் போன்ற பெண்கள் இனிமேல் காவல்துறையால் பாதிக்கப்படக்கூடாது என்று கண்ணீர் மல்க கூறினார்.
பாதிரிகுப்பத்தை சேர்ந்த பெண்கள் 30க்கும் மேற்பட்டோர் வரவேற்பு கொடுத்தனர். இவர்கள் அனைவரும் மைக்ரோ - பைனான்ஸ் என்ற நுண்நிதி கடனால் பாதிக்கப்பட்டவர்கள். எங்களை போன்ற பெண்களை பாதுகாப்பது மாதர்சங்கம்தான் என்றார்கள்.
கடலூர் நகரை நோக்கி செல்லும் பைக்கில் சென்ற 5வயது குழந்தைகளுடன் சென்ற ஒரு நபர் நடைபயணத்தை பார்த்து எதற்காக என்று கேட்டு விபரம் தெரிந்த பின்னால் தன்னுடைய 5வயது குழந்தையை நடைபயணத்தில் 1கி.மீ. தூரம் நடக்க வைத்தார். என்னுடைய குழந்தையும் பாதுகாப்பாக இருக்கணும்ல என்றார். - - ஜி.ராணி