உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் குட்டிகளுடன் உலாவரும் யானை கூட்டம் - தண்ணீர் தொட்டியில் தாகம் தீர்த்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
தடாகம் வனப்பகுதியில் காட்டுயானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேவைகளுக்காக அவ்வப்போது ஊருக்குள் வருகின்றன. தற்போது கோவை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதிகள் வறட்சி அதிகமாகி உள்ளது. மழை இல்லாததால் வனப்பகுதிகளில் ஓடும் சிற்றோடைகள், நீர்வீழ்ச்சிகளும் தண்ணீரின்றி உள்ளது. இதனால் உணவு, தண்ணீர் தேடி காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி வர துவங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக 24 வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட மருதம் கரைக்கீழ் பதி என்ற கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொட்டி ஒன்றில் தண்ணீர் தேடி வனப் பகுதியில் இருந்து குட்டிகளுடன் வந்த யானை கூட்டம் தண்ணீர் குடித்து நீண்ட நேரத்திற்கு பிறகு ஆடி, அசைந்தபடி வனப்பகுதிக்குள் சென்றன. காட்டு யானைகள் ஊருக்குள் வந்து தண்ணீர் குடித்த காட்சிகளை அப்பகுதியை சேர்ந்த சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோடை காலம் தொடங்கிவிட்டதால் வனப்பகுதியில் போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதாகவும், இதை தடுக்க வனப்பகுதிகளில் விலங்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில், நீர் நிரப்ப வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கிராம மக்களும், வன உயிரின ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.