அவிநாசி அருகே அம்மாபாளையம் பகுதியில் தோட்டத்திற்குள் புகுந்து விவசாய தொழிலாளி ஒருவரை சிறுத்தை தாக்கி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவினாசி ஒன்றியம் பாப்பாங்குளத்தில் தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் திங்களன்று பதுங்கி இருந்த சிறுத்தை தோட்டத்து உரிமையாளர் மற்றும் தொழிலாளியை தாக்கியது. இவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து தகவலறிந்த வனத்துறையினர், வருவாய்த்துறையினர், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் இணைந்த சிறுத்தை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அன்று மாலை நேரத்தில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுவந்த மணிகண்டன் என்ற ஊழியரை தாக்கியது. மேலும் மற்றொரு வரையும் தாக்கியுள்ளது.
இதையடுத்து சிறுத்தையை பிடிக்க கோவையில் இருந்து வரவழைக்கப்பட்ட மூன்று கூண்டில் மாமிசம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மயக்க ஊசி மற்றும் சிறுத்தை பதுங்கி உள்ள இடத்தைச் சுற்றிலும் வலை அமைக்கப்பட்டுள்ளது, மேலும் சென்சார் வசதிகள் கொண்ட ட்ரோன் கேமரா 12 பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென சிறுத்தை வேறு இடத்திற்கு சென்று விட்டதாக வனத்துறையினர் கூறினர் இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து உதவி வனப்பாதுகாவலர் கிருஷ்ணசாமி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது: சிறுத்தையை பிடிக்க 5தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, பொங்குபாளையம், ஈட்டிவீரம்பாளையம், உட்பட 20 கிராமங்களில் குழு பிரிந்து சென்றுள்ளது. பெருமாநல்லூரில் பார்த்ததாக கூறப்படும் சிறுத்தையின் கால் தடம் மற்றும் எச்சத்தை தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்கும் பணியில் நிபந்தனைக்கு உட்பட்டு தான் பல வேலைகள் செய்ய முடியும். மேலும் சிறுத்தையை தேடும் பணியானது மங்கலம் வரை குழுக்கள் சென்றுள்ளது என தெரிவித்தார். இந்த நிலையில் அம்மாபாளையம் திருப்பூர் செல்லும் சாலை அருகாமையில் விவசாய தோட்டத்திற்குள் சிறுத்தை உள்ளே நுழைந்து தொழிலாளி ராஜேந்திரன் என்பவரை தாக்கியது. இவர் பலத்த காயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சிறுத்தையை பிடிக்கும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.