கோவை அருகே வழக்கறிஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் 6 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்
கோவை மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த மயிலேரிபாளயத்தில் வழக்கறிஞர் எஸ்.உதயகுமார் (48) கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை ரத்தினபுரியை சேர்ந்த உதயகுமார் கோவையில் பல ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி டாக்டர் நித்யாவள்ளி, கோவில்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். நேற்று பொள்ளாச்சி செல்ல திட்டமிட்டிருந்த உதயகுமார் தனது காரில் வீட்டை விட்டுப் புறப்பட்டார். ஆனால் மயிலேரிபாளயம் அருகே உள்ள ஒரு கோழிப்பண்ணை அருகே அவரது உடல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது கழுத்து மற்றும் மார்பில் பல காயங்கள் இருந்தன.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் அடையாளம் தெரியாத நபர்கள் காரில் வந்த உதயகுமாரைத் தடுத்து நிறுத்தி அவரை காரில் இருந்து இறங்கச் சொல்லி கோழிப்பண்ணை அருகே கொண்டு சென்று கத்திகளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவரது காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.தகவலின் பேரில் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உதயகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு கொலையாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்தார்.காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கில் முக்கியமான தடயங்கள் கிடைத்துள்ளது எனவும் தனிப்படை காவல்துறையினர் விரைவில் கொலையாளிகளைப் பிடிப்பார்கள் என்று எஸ்.பி பத்ரிநாராயணன் தெரிவித்தார்.