பழங்குடி மக்களுக்கு அரசு வீடு கட்டித்தருக ஆட்சியரிடம் மலைவாழ் மக்கள் சங்கம் மனு
சித்தேரி பழங்குடி மக்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டித்தர வேண்டும், என வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷிடம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வெள்ளியன்று மனு அளித்தனர். அம்மனுவில், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட சித்தேரி மலையில் ஊமத்தி, நொச்சிக்குட்டை, பேரேரி, மெணசி, அலகூர், எருமக்கடை, ஜக்கம்பட்டி, கலசப்பாடி ஆலமரத்துவலவு, நலமாங்கடை உள்ளிட்ட 12 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் மலையாளி பழங்குடி மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களில் சிலர் மட்டுமே சிறு, குறு விவசாயிகள்; பெரும்பகுதியினர் நிலம்மற்ற ஏழைகள்; கூலி வேலை செய்து வருகின்றனர். ஆண்கள் கூலி வேலைக்காக வெளியூர் செல்கின்றனர். பெண்கள் அங்கு விவசாயக்கூலி வேலை செய்கின்றனர். குடிசைகளில் வசித்து வரும் இவர்களால், வறுமையின் காரணமாக சொந்த வீடு கட்ட முடியவில்லை. கிடைக்கும் கூலியானது உணவுக்கும், அன்றாட செலவுக்கு மட்டுமே உள்ளது. கூலி வேலை செய்து வரும் பணத்தில் சேமித்து வீடு கட்ட முடியவில்லை. இருக்கும் வீட்டிலேயே இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்துவரும் அவல நிலை உள்ளது. எனவே, வறுமையினால் தவித்து வரும் சித்தேரி மலைவாழ் மக்கள் சுமார் 60 குடும்பங்களுக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன், அப்பகுதி பழங்குடி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.