tamilnadu

img

ரயில்வேயில் ஓப்பன் லைன் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிடுக.... தென்னக ரயில்வே மேலாளருக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி, வலியுறுத்தல்......

கோயம்புத்தூர்:
ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தென்னக ரயில்வே மேலாளர் மற்றும் டிவிசன் மேலாளருக்கு கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தென்னக ரயில்வே மேலாளர் மற்றும் டிவிசன் மேலாளருக்கு  பி.ஆர்.நடராஜன் எம்.பி., எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றின் பற்றாக்குறை முழுமையாக தீர்க்கப்படவில்லை. இதன்காரணமாக மரணமடைவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று சங்கிலியை உடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு மே 10 ஆம்தேதி முதல் 24 ஆம்தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கினால் ரயில்வே சேவைகள், பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ உள்ளிட்ட பயண சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறையும், 50 சதமானவர்கள் பணிக்கு வந்தால் போதும் எனவும் உத்தரவிட்டுள்ளது. தென்னகரயில்வேயில் அரசு அலுவலகங் களில் ஷெட், ஷாப்களிலும் 50 சதவிகித தொழிலாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய பணியாற்றும் ரயில்வே தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதை உறுதி செய்திட வேண்டுகிறேன். மேலும், ரயில்வே மருத்துவமனைகளில் தேவையான ஆக்சிஜன்மருந்துகள் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.ரயில்வே துறையில் உள்ள இஞ்சினியரிங், டிராபிக், எலக்ட்ரிக்கல் ஏசி, கேரேஜ் வேகன் மெக்கானிக்கல், டிஆர்டி, ஓட்டுனர் கார்டு போன்ற ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ரயில் ஓடு பாதையில் ஓப்பன் லைனில் சங்கிலி தொடர் போல பிரியாமல் கூட்டமாக பணி செய்து வருகிறார்கள். சென்ற கொரோனா காலங்களில் இஞ்சினியரிங் பகுதியில் உள்ள ஊழியர்கள் தனிமனித இடைவெளி இல்லாமல் கூட்டமாக பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமல் கடினமான  வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இச்சூழலில் தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. ஆனால், ஓப்பன் லைன் ஊழியர்களுக்கு இதுவரை கொரோனா தடுப்பு பாதுகாப்பு சாதனங்கள் தேவைக்கேற்ப வழங்கப்பட வில்லை.

மேலும், சுழற்சி முறையில் பணி செய்வது உட்பட எந்த திட்டங்களும் இதுவரை நடைபெறவில்லை என்பது தெரிய வருகிறது. கொரோனாவின் முதல் அலையில், 700க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் மரணமடைந்துள்ளனர். இப்போதும் இத்தகைய சூழல் நிலவுவது கவலையை ஏற்படுத்துகிறது. உடனடியாக தென்னகரயில்வே மேலாளர் , ஓப்பன் லைன்ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பை உறுதி செய்திடவேண்டும்.ஊரடங்கினால் பொது போக்குவரத்துகள் முற்றாக முடங்கிப் போனதால் வெளியிலிருந்து வருபவர்கள் உட்பட 50 சதமான ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டும். தனிமனித இடைவெளியுடன், கூட்டமாக சேராமல் பணிகள் வழங்க வேண்டும். கொரோனா பாதுகாப்பு சாதனங்கள், கவச உடைகள், வெப்ப பரிசோதனைகள் நடைபெற வேண்டும். கொரோனா தொற்றுள்ளவருக்கு சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும். பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து வசதிகள் இல்லாததினால் மீண்டும் ஒர்க்மேன் ஸ்பெஷல் வண்டிகள்  அனைத்து டிவிசன்களிலும் இயக்கப்பட வேண்டும். ரயில்வேயில் கொரோனா பாதுகாப்பு  உத்தரவுகள்  அமலாவதை கண்காணிக்க வேண்டும்.

உதாரணமாக ஈரோடு டீசல் ஷெட்டில் கொரோனா பாதுகாப்பு விதிகளின் உத்தரவு மாற்றுதிறனாளி களுக்கு அமலாக்கப்படுவதில்லை. ஆகையால், ரயில்வே தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ரயில்வே ஓப்பன் லைன் ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்புகளை உடனடியாக வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அக்கடிதத்தில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., தெரிவித்துள்ளார். 

;