கோவையில் உள்ள சூலூர் விமானப்படைத்தளத்தில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெறுகிறது.
கோவையில் உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் 'தரங் சக்தி-2024' எனும் பன்னாட்டு விமான பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 6-ஆம் தேதி துவங்கிய விமான பயிற்சியில் இந்தியாவோடு ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகள் கலந்து கொண்டு விமான பயிற்சி ஒத்திகைகளை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் இந்தியாவின் தேஜஸ், ஜெர்மனியின் typhoon உள்ளிட்ட உயர்ரக போர் விமானங்கள் பங்கேற்ற பயிற்சி ஒத்திகை நடைபெற்றது. இந்த நிலையில் ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமான கருவிகளின் கண்காட்சி இன்று சூலூர் விமானப்படைத்தளத்தில் துவங்கியுள்ளது. இதில் 62 அரங்குகள் அமைக்கப்பட்டு HAL, BHEL உள்ளிட்ட பொதுத்துறை மற்றும் தனியார் ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி இக்கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். இன்றும் நாளையும் இக்கண்காட்சியினை ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் மற்றும் ராணுவப் படையினர் பார்வையிடுகின்றனர். விமான பயிற்சி நிறைவு நாளான ஆகஸ்ட் 15 அன்று பொதுமக்கள் இக்கண்காட்சி பார்வையிட அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.