கோவை அருகே காய்ச்சலால் சிறுமி பலி
கோவை, மே 11-கோவை அருகே ஆறு வயது சிறுமி காய்ச்சலுக்கு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள திம்மங்குத்து காளியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் கூலிதொழிலாளி சேகர். இவரது மனைவி மாலதி. இவர்களின் மகள் மதுஸ்ரீ(5). மாலதியின் பெற்றோர் கிணத்துக்கடவு தட்டக்கல்புதூர் பகுதியில் வசித்து வருகின்றனர். கோவில் திருவிழாவிற்காக கடந்த 5ம் தேதி மாலதி தனது குழந்தை மதுஸ்ரீ உடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மதுஸ்ரீக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர். ஆனால், மதுஸ்ரீ வெள்ளியன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கிணத்துக்கடவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பவானி சாகர் அருகே 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதம்
ஈரோடு, மே 11-பவானிசாகர் அருகே 3 வீடுகள் சனியன்று தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தன. பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம்பாளையம், கற்பூரகாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துக்குமாரி (32), சாந்தாமணி (40), பத்மாவதி (40). இவர்கள் மூவரும் கூலித் தொழிலாளர்கள். சனிக்கிழமை காலை வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு விவசாய தோட்ட வேலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மதியம் முத்துக்குமாரியின் வீடு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.இதற்கிடையில், அருகில் இருந்த சாந்தாமணி மற்றும் பத்மாவதி வீடுகளுக்கும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் முத்துக்குமாரி வீட்டு உபயோக பொருட்களும், சைக்கிளும் எரிந்து சாம்பலானது. சாந்தாமணி வீட்டில் இருந்தமரகட்டில், பீரோ மற்றும் இரு சக்கர வாகனம் தீக்கு இரையானது. பத்மாவதி வீட்டில் இருந்த வீட்டுச் சாமான்கள், அரைபவுன் தங்க கம்மல், பள்ளி மற்றும் கல்லூரி மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தீவிபத்தில்எரிந்து சேதமடைந்தன. இத்தீவிபத்து குறித்து பவானிசாகர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.