tamilnadu

img

துப்புரவுப் பணிகளில் தனியார்மயத்தை கைவிடுக

திருப்பூர், மே 20 -திருப்பூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்ததாரர்கள் முறைகேடு மோசடியில் ஈடுபடும் நிலையில், துப்புரவுப் பணி தனியார்மயத்தைக் கைவிட வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தி உள்ளது.திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் 3 ஆவது மாநாடுஞாயிறன்று திருப்பூர் காந்திநகர் எம்.சி., மண்டபத்தில் சங்கத் தலைவர் பி.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டை சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் வேலை அறிக்கை, எதிர்காலத் திட்டத்தை விளக்கினார்.

தீர்மானங்கள்

இதைத் தொடர்ந்து இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் வேலை செய்யும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டேங்க் ஆப்ரேட்டர்மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு 7ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியம் மற்றும் நிலுவைத் தொகைகளை காலதாமதம் செய்யாமல் உடனடியாக கணக்கிட்டு வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளின் சுகாதாரம் பேணும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைக் காவலர்களை ஊராட்சி ஊழியர்களாக அங்கீகரித்து முறையான ஊதியம் வழங்கவேண்டும்.திருப்பூர் மாநகராட்சி, ஐந்துநகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டதுப்புரவு ஊழியர்கள், ஓட்டுநர்கள்தினக்கூலி ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். இவர்களுக்கு அரசாணை 2 (டி) 62 படி குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து வழங்கிட வேண்டும். அதேபோல் திருப்பூர்மாநகரம் உள்ளிட்ட நகர்ப்புறஉள்ளாட்சிகளில் துப்புரவு ஊழியர்கள், லாரி, ஆட்டோ ஓட்டுநர்கள் என பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் வேலை செய்கின்றனர். அந்த தொழிலாளர்களுக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்து அறிவித்த தினக்கூலி ஊதியத்தை ஒப்பந்ததாரர்கள் வழங்குவதில்லை. அத்துடன் சட்டப்படி அவர்களிடம் பிடித்தம் செய்யும் இஎஸ்ஐ, பிஎப் போன்றவற்றுக்கு ரசீதுகள் வழங்கப்படுவதில்லை. எனவே மோசடி செய்கிற தனியார்ஒப்பந்த நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, ஒப்பந்தங்களை ரத்து செய்வதுடன், இத்தொழிலாளர்களுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் நேரடியாக ஊதியம், சட்ட உரிமைகள் வழங்கிட வேண்டும். கடந்த 2000ஆம் ஆண்டு மே 10ஆம் தேதிக்குப் பின் பணியமர்த்தப்பட்ட டேங்க் ஆப்ரேட்டர்களை நிரந்தரமாக்கி ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊழியர்களுக்குப் பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வேண்டும், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளைத் தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், பொருளாளர் உடுமலை தண்டபாணி மற்றும் ஐந்து துணைத் தலைவர்கள், ஐந்து உதவிச் செயலாளர்கள், 24 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, இம்மாநாட்டில் இருநூற்றைம்பது பெண் ஊழியர்கள் உள்பட ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் என்.சங்கர்குமார் நன்றி கூறினார்.