கோவை மத்திய சிறை வளாகத்தில் நடந்த சோதனையின்போது 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மத்திய சிறை வளாகத்தில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என 1,500க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவை மத்திய சிறைக்காவலர்கள் நேற்று இரவு சிறை வளாகத்தில் வழக்கமான சோதனை பணியில் ஈடுபட்டனர். இதில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு இருந்த உயர் பாதுகாப்பு வளாகத்தில் சோதனை நடத்தியபோது 7 செல்போன்கள் சிக்கியது.
இவை அனைத்தும் சாதாரண மாடல் செல்போன்களாகும். இந்த செல்போன்கள் அனைத்தும் தண்டனை கைதிகளின் பிளாக்கில் உள்ள, கைதிகள் இல்லாத சிறை அறைகளின் கழிவறையில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.