tamilnadu

ஹர்திக் படேல் மீது தாக்குதல்!

அகமதாபாத், ஏப். 19- குஜராத்தில் காங்கிரஸ் சார்பாக நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில், மேடையில் பேசிக் கொண்டிருந்த ஹர்திக் படேலை ஒரு நபர் தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி என்ற படேல் சமூகத்தவருக்கான அமைப்பு, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இட ஒதுக்கீடு கோரி குஜராத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது. அதன் தலைவராக இருந்தவர் ஹர்திக் படேல். கடந்த மார்ச் மாதம் இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.வெள்ளியன்று (ஏப்ரல் 19) காலையில் குஜராத்திலுள்ள சுரேந்தர் நகர் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் ஹர்திக் கலந்துகொண்டார். ஜன் ஆக்ரோஷ் சபா என்று பெயரிடப்பட்ட இந்த கூட்டத்தை அம்மாவட்ட கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது,மேடையில் ஏறிய ஒருவர் ஹர்திக்கின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அந்த நபர் அடையாளம் காணப்பட்டாலும், அவர் என்ன காரணத்துக்காகத் தாக்கினார் என்பதற்கான விளக்கம் வெளியாகவில்லை.குஜராத்தில் ஆளும் கட்சியான பாஜகவை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார் ஹர்திக். வியாழனன்று அவர் மஹிசாகர் மாவட்டத்திலுள்ள லுனாவாடா எனுமிடத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொள்வதாக இருந்தது. அங்கு ஹர்திக்கின் ஹெலிகாப்டர் ஒரு விவசாயியின் நிலத்தில் இறங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் அவர் ஹெலிகாப்டர் இறங்க மறுப்பு தெரிவித்தார். இதனால், அவர் சாலை வழியாக லுனாவாடா செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையிலேயே, வெள்ளியன்று அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

;