tamilnadu

img

மயாங் அகர்வால் இரட்டை சதம்

இந்தூர் டெஸ்ட் 

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் இந்தூரில் வியாழனன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கி யது. வங்கதேச அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்தியப் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். அனுபவ வீரர் ரஹீம் (43) மட்டும் தனி ஒருவராகப் போராட, பின் வரிசை வீரர்கள் இந்திய பந்துவீச்சைக் கணிக்க  முடியாமல் சரண்டர் ஆனார்கள். வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் ஷமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே ரோஹித் சர்மாவை (6) இழந்தது. அடுத்து கள மிறங்கிய புஜாரா, மயாங் அகர்வாலு டன் ஜோடி சேர்ந்து நிதானமாக ரன்கள் சேர்த்தனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 26 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. மயாங் அகர்வால் (37), புஜாரா (43) ஆகியோர் களத்திலிருந்த நிலையில், வெள்ளியன்று தொடங்கிய 2-ஆம் நாள் ஆட்டத்தில் கூடுதலாக 11 ரன்கள் சேர்த்த புஜாரா (54) அபுஜயத் பந்தில் வெளியேறினார். அதே அபுஜயத் அடுத்த ஓவரில் கேப்டன் கோலி (0) தங்க முட்டையுடன் ஓய்வறைக்கு திரும்ப இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  

அடுத்துக் களமிறங்கிய அனுபவ வீரர் ரஹானே, மயாங் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்து இருவரும் தாறுமாறாக ரன் குவிக்கத் தொடங்கினர். தொடக்கம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயாங் அகர்வால் சதமடித்து அசத்தினார். அடுத்த சில நிமிடங்களில் ரஹானே அரைசத மடித்தார். ரன் குவிப்பதில் தொடர்ந்து வேகம் காட்டிய ரஹானே (86) அபுஜயத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய அதிரடி வீரர் ஜடேஜா நிதானமாக ரன் சேர்த்து மேலும் விக்கெட்டுகள் சரியாமல் பார்த்துக்கொண்டார். விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தாலும் கண்டுகொள்ளாமல் ரன் மழை பொழிந்த மயாங் அகர்வால் இரட்டை சதமடித்து வரலாறு படைத்தார். மயாங் அகர்வாலுக்கு இது 2-வது இரட்டை சதமாகும். இரட்டை சதமடித்துக் கூடுதலாக 43 ரன்கள் அதிரடி பாணியில் சேர்த்த மயாங் அகர்வால் (243) மெஹிதி ஹாசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.   2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 114 ஓவர்களில் 6 விக்கெட்டு களை இழந்து 493 ரன்கள் குவித்துள்ளது. ஜடேஜா(60), உமேஷ்(25) ஆகியோர் ஆட்டமிழக்காமல்  களத்தில் உள்ளனர். 343 ரன்கள் முன்னிலையில் உள்ள இந்திய அணி தொடர்ந்து 3-ஆம்நாள் ஆட்டத்தைச் சனியன்று தொடங்குகிறது. 

அபுஜயத் மிரட்டல் 

வங்கதேச அணியின் வேகப்பந்துவீச்சாளர் அபுஜயத் இந்தூர் டெஸ்ட் போட்டியின் மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளார். இந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேச பந்துவீச்சாளர்கள் அனைவரும் சொதப்ப அபுஜயத் மட்டும் தனியாகப் போராடி மிடில் ஆர்டர் வீரர்கள் அனைவரையும் வெளியேற்றி  அசத்தினார். “ரன் மிசின்” என அழைக்கப்படும் இந்திய அணியின் கேப்டன் கோலியை டக்-அவுட் செய்தவரும் இவர் தான். வேகப்பந்துவீச்சு என்றாலும் மிதமான வேகத்திலேயே ஸ்விங் செய்கிறார். 140 கிமீ வேகத்திற்கு உட்பட்டு பந்துவீசினாலும் துல்லியமாக ரிலீஸ் செய்து பேட்ஸ்மேன்களை திணற வைக்கிறார். அபுஜயத்தின் மிரட்டலான பந்துவீச்சைச் சமாளிக்க இந்திய பேட்ஸ்மேன்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.