tamilnadu

இரு வேறு விபத்து: இருவர் பலி

திருப்பெரும்புதூர், அக்.31- திருப்பெரும்புதூர் அடுத்த அமரன்பேடு கிராமத்தை சேர்ந்தவர் டில்லிகணேஷ் (36). இவர்  இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் மிஷின் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார். பணி முடித்து தொழிற்சாலையில் இருந்து தனது மோட்டர் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது சிபிகாட் சாலையில் சென்ற போது சாலையில் இருந்த பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்தார். இதில் டில்லிபாபுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல பொன்னேரியை அடுத்த ஆரூர் வடக்குபட்டியைச் சேர்ந்தவர் வேலு ( 52). கூலித் தொழிலாளி. இவர், கடந்த 20 ஆம் தேதி தனது மகனுடன் பொன்னேரி சென்று கொண்டிருந்தார். சிங்கிலிமேடு புற்று கோவில் அருகே சென்ற போது, ஒரு மாடு குறுக்கே வந்துள்ளது. இதில் நிலைத் தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் வேலுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வேலு சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.   

;