tamilnadu

img

பள்ளிகளில் திருக்குறள் அறநெறி கல்வியை அமல்படுத்தக் கோரிக்கை

  கரூர்: அகில இந்திய ஐ.சி.எஸ்.இ கல்வி வாரியப் பள்ளிகளில் திருக்குறள் அறநெறி கல்வியை அமல்படுத்தக் கோரியும், வாரியத்தின் தமிழ் பாட புத்தகங்களில் திருக்குறளுக்கு சிறப்பிடம் அளிக்க கோரியும் திருவள்ளுவர் மாணவர் இளைஞர் பேரியக்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற ஐ.சி.எஸ்.இ வாரியத்தின் வருடாந்திர தேசிய மாநாட்டில் தலைவர், செயலரிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டது.  ஐ.சி.எஸ்.இ கல்வி வாரியத்தின் வருடாந்திர தேசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வருகை தந்த அகில இந்திய ஐ.சி.எஸ்.இ கல்வி வாரிய தலைவர் டாக்டர் இமானுவேல், வாரியத்தின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் செயலர் டாக்டர் ஜெரி ஆரத்தோன் ஆகியோரை அகில இந்திய திருவள்ளுவர் மாணவர் இளைஞர் இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளரும் கரூர் பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வருமான முனைவர் சொ.ராமசுப்ரமணியன் நேரில் சந்தித்து நாடு முழுவதும் உள்ள ஐ.சி.எஸ்.இ பள்ளிகளில் திருக்குறள் அறநெறி கல்வியை அமல்படுத்தக் கோரி வேண்டுகோள் விடுத்தார். மேலும் ஐ.சி.எஸ்.இ வாரியத்தின் தமிழ் பாட புத்தகங்களில் திருக்குறளுக்கு சிறப்பிடம் அளிக்க கோரியும் வலியுறுத்தினார்.  உலகப் பொது மறை திருக்குறளின் சிறப்பு குறித்து முனைவர் ராமசுப்பிரமணியனிடம் கேட்டறிந்த ஐ.சி.எஸ்.இ. கல்வி வாரியத்தின் தலைவர் செயலர் இருவருமே இது குறித்து விரைவில் ஆவண செய்வதாக உறுதி அளத்தனர். இச்சந்திப்பின் போது வாரியத்தின் தமிழகம் புதுவை மண்டல செயலர் டாக்டர் சார்லஸ், விஜயலஷ்மி சர்வதேச பள்ளி முதல்வர் கார்த்திகாலஷ்மி மற்றும் வாரியத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.