ஊரை விட்டு ஒதுக்கிய விவகாரம்: ஆட்சியர், காவல்துறைக்கு நோட்டீஸ்
கடலூர், மே 21-கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து(60). கிராம முக்கியஸ்தரான இவர் ஞாயிறன்று மகன் செல்வேந்திரன் மற்றும் குடும்பத்தி னருடன் திட்டக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தற்கொலை செய்து கொள்ளும் நோக்குடன் மண்ணெண்ணை கேனுடன் வந்திருந்தார்.ஊரிலுள்ள கோயிலில் திருவிழா நடத்தப்பட்டதில் கணக்கு கேட்ட விவகாரத்தில் தன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டதாக கூறினார். பின்னர், துணை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அனுப்பி வைத்தார். இதுதொடர்பான செய்தி நாளிதழ்களில் வெளியாகியிருந்தது.இதனையடுத்து, இந்த வழக்கினை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக, ஆணையம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் தனித்தனியாக விசாரணை நடத்தி 4 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் ஏ.சித்தரஞ்சன் மோகன்தாஸ் உத்தரவிட்டுள்ளார்.பாசார் கிராமத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையமே தாமாக முன்வந்து வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளாட்சி தேர்தல்: கடலூரில் கூடுதலாக 11 வாக்குச்சாவடிகள்
கடலூர், மே 21-தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. அந்த தேர்தல் விரைவில் நடத்தப்படலாம் என்பதால் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் அண்மையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான வாக்குச்சாவடி விபரம் வெளியிடப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் 3,538 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. கடலூர், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு 2300 இடங்களில் மட்டுமே வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, வாக்குச்சாவடியை மாற்றி அமைத்தல், கூடுதல் வாக்குச்சாவடி அமைத்தல் தொடர்பாக 40 மனுக்கள் பெறப்பட்டதாக உள்ளாட்சிக்கான தேர்தல் பிரிவு அலுவலர் அ.ராஜேந்திரன் கூறினார். பெறப்பட்ட 40 மனுவில் 33 மனுக்கள் ஏற்கப்பட்டன. 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.ஊரகப்பகுதிகளில் ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமையும் வகையில் 2,883 வாக்குச்சாவடிகளும், நகரப்பகுதிகளில் 1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி வீதம் 359 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படுகின்றன. பேரூராட்சிகளில் 1200 வாக்காளருக்கு ஒரு வாக்குச்சாவடி வீதம் 296 வாக்குச்சாவடிகள் அமைகின்றன.கூடுதல் வாக்காளர்கள் இருப்பதால் கடலூர் பாதிரிக்குப்பத்திலும், கம்மாபுரத்திலும் ஒரு வாக்குச்சாவடியில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக வாக்களிக்க வாக்குப்பதிவு மையம் அமைக்கப்படுகிறது. இதேபோன்று, கடலூர் நகராட்சிக்குட்பட்ட 9 இடங்களில் 1200க்கும் அதிகமான வாக்குகள் இருப்பதால் ஆண், பெண்களுக்கு தனித்தனியாக கூடுதலாக 9 வாக்குப்பதிவு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் மொத்தம் 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்கள், 683 பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டி உள்ளது. இதில், ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட பஞ்சாயத்துகளில் பழைய முறையிலான காகிதத்தில் வாக்களிக்கும் முறையும், நகராட்சி, பேரூராட்சிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும் கடைபிடிக்கப்படுகிறது.