tamilnadu

img

இன்றுமுதல் எமலோகம் மூடப்படுகிறது! - ஜிஜி

‘‘சித்ரகுப்தா...சித்ரகுப்தா...’’ என எமதர்மன் அலறி அழைக்கும் குரல் கேட்டது. ‘‘என்ன அரசே... என்னவாயிற்று...?’’ என்று பதறியபடி எமதர்மராஜனின் அறைக்கு ஓடினான் சித்ரகுப்தன். ‘‘என்னவாயிற்றா...? சிபிஐ-யிலிருந்து நோட்டீஸ் வந்திருக்கிறதே பார்க்கவில்லையா நீ?’’ ‘‘சிபிஐ-யிலிருந்து ரெய்டு வந்தால்தான் பதறவேண்டும் அரசே. நோட்டீஸ்தானே வந்திருக்கிறது. பார்த்துக் கொள்ளலாம் விடுங்கள்.’’

‘‘யோவ் சித்ரகுப்தா இது பூலோக சிபிஐ கிடையாது ‘சிவலோக பீரோ ஆப் இன்டலிஜென்ஸ்’ ஏதாவது தப்பா இருந்தா என்ன ஆகுமென்று தெரியுமல்லவா?’’ என்ற எமதர்மர், ‘‘சென்றமாதம் இந்தியாவில் மொத்தம் 50,487 பேர்படிதான் நம் லெட்ஜர் கணக்குப்படி இறந்திருக்க வேண்டும். ஆனால் இறந்துபோனவர்கள் எண்ணிக்கை 1.01,123 என்று சிவலோகத்திற்கு பட்டியல் அனுப்பியிருக்கிறாய் நீ. ‘டார்கெட்டைவிட அதிகமாக உயிரெடுக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. இது எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து ஏழு நாழிகைகளுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று சிவலோகத்திலிருந்து கேட்டிருக்கிறார்கள். என்னுடைய டைரி கணக்குப்படி நான் பாசக்கயிறு போட்டு பிடித்தது 50,110 பேர்தான். ஆனால் மீதமுள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் எப்படி இறந்திருக்க முடியும்? நீ கணக்கு எதாவது தவறாக எழுதிவிட்டாயா?’’

‘‘அரசே நீங்கள் அப்படி ஏதாவது சந்தேகப்படுவீர்கள் என்பதற்காகத்தான் நான் கம்யூட்டர் வைத்து பட்டியல் போடுகிறேன். சந்தேகம் இருந்தால் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் பூலோகம் போய் ஆயுள் முடிந்தவர்களின் கழுத்தில் பாசக்கயிறு மாட்டி இழுத்து வருவதில் மட்டும் குறியாய் இருந்து என்ன பயன்? பூலோகத்தில் ஆயுள் முடியாமலேயே பலபேர் இறந்துபோகிறார்கள் அதற்கு என்ன காரணம் என்பதை பார்க்க வேண்டாமா?’’ என்றான் சித்ரகுப்தன். ‘‘பூலோகத்தில் ஆயுள் முடியாமலேயே நிறைய பேர் இறந்து போகிறார்களா? எதனால்...? வா போய் பார்த்துவிட்டு வருவோம்.’’ என்று எமதர்மன் சொல்ல பூலோகம் போக தயாரானான் சித்ரகுப்தன். இந்தியாவில் எமதர்மனும் சித்ரகுப்தனும் எருமை வாகனத்தில் வந்திறங்கிய இடம் ஒரே புகை மூட்டமாக இருந்தது. புகை மண்டலத்திற்குள்ளிருந்து முகமுடி அணிந்த ஒரு மனிதன் மூக்கில் சுவாசக்குழாயுடன் வந்தான். அவன் கைகளில் ஆறேழு முகமுடிகளும் சுவாசக் குழால்களும் மினி சிலிண்டர்களும் இருந்தன. ‘‘சார் ஓ2 கிட் வாங்கிக்கோங்க சார்’’ என்றார். 

‘‘ஓ2 கிட்-டா? அப்படின்னா...?’’ என்றுகேட்ட எமதர்மருக்கு,
‘‘சார் இப்படி வெறும் மூக்குல சுவாசிக்கிட்டிருந்தீங்கன்னா ரெண்டுமாசத்துல நீங்க சுவாசக் கோளாறுல இறந்துடுவீங்க. இது சுத்தமான மாசற்ற ஆக்சிஜன் அடக்கி வைக்கப்பட்டிருக்கிற சிலிண்டர். இதில் உள்ள ஆக்சிஜன் உங்களுக்கு ஐந்து நாட்களுக்கு சுவாசம் தரும். இதுதான் அதுக்கான டியூப்’’ என்றான் ஆக்சிஜன் வியாபாரி.
‘‘இது எவ்வளவு விலை?’’ என்று கேட்ட சித்ரகுப்தனுக்கு
 

‘‘சார் இது ஓ2 நார்மல். லோக்கல் காற்றை சுத்தப்படுத்தி எடுத்த ஆக்சிஜன். இதனோட விலை ரூ.2000/-. இதோ இது ஓ2 ஸ்பெஷல். இமயமலையில இருக்கற காற்றுல இருந்து எடுக்கப்பட்ட ஆக்சிஜன். உடல் ஆரோக்கியத்துக்கு ஒருவருஷ கேரண்டி இருக்கு, விலை ரூ.5000/-. இதுங்களைவிட சூப்பர் கிட் ஒன்னு இருக்கு. அது அமேசான் காடுகளில் உள்ள மூலிகை காற்றிலிருந்து எடுக்கப்பட்ட ஆக்சிஜன் ரூ.10000/- அதை சுவாசிச்சா சுவாச பிரச்சனையும் வராது ஆரோக்கியமும் கெடாது. கம்பெனில ஆஃபர் விலையா ரெண்டு வாங்கினா ஒன்னு இலவசமாக தர்றோம்’’ என்றான்.

அதைக்கேட்ட எமதர்மர் எருமை வாகனத்தில் அமர்ந்தவாறே ‘‘அடேய் சித்ரகுப்தா, இந்த மானிடன் என்ன சொல்கிறான் என்று எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை.’’ என்றார்.  ‘‘அரசே இந்த மனிதன் கூறுவது ஓரளவுக்கு உண்மைதான். நானும் நம்முடைய லெட்ஜரில் பார்த்தேன். 2024, 2025ஆம் வருடங்களில் இறக்க வேண்டிய முதியவர்கள் இப்போதே இறந்து போயிருக்கிறார்கள். காற்றில் கலந்துள்ள மாசு நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே வருவதால் நாம் நிர்ணயித்திருக்கும் நாட்களுக்கு முன்பாகவே மக்கள் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.’’  ‘‘காற்றில் கலந்துள்ள மாசை குறைக்க கவர்ன்மெண்ட் நடவடிக்கை எடுக்கவில்லையா?’’ ‘‘இதோ இந்த மனிதன் கையில் வைத்துக்கொண்டு விற்கிறானே இதுதான் அந்த நடவடிக்கை. மாசை காசாக்கும் திட்டம்.’’ ‘‘சித்ரகுப்தா. முதலில் இங்கிருந்து வாகனத்தை எடு. எனக்கு லேசாக மூச்சு முட்டுவது போல் இருக்கிறது.’’ என்றதும் சித்ரகுப்தன் எருமைவாகனத்தை ஓட்ட ஆரம்பித்தான்.

எருமை வாகனத்தில் பறந்து கொண்டிருந்த எமதர்மன், ‘‘குப்தா, வாகனத்தை ஏதாவது ஒரு மரத்தின் ஓரத்தில் இறக்குகிறாயா. அவசரமான ஒன் பாத்ரூம் வருகிறது.’’ என்று கூற, ‘‘நல்லது அரசே. நானே கேட்கலாம் என்று இருந்தேன்.’’ என்றவாறு ஒரு மரத்தின் ஓரத்தில் எருமை வாகனத்தை இறக்கி விட்டு அதிலிருந்து இருவரும் வேறு வேறு மரத்தின்கீழ் சிறுநீர் கழிக்கப்போக சுமார் ஐம்பது பேர் கொண்ட கும்பல் அவர்களை பிடித்து மரத்தில் கட்டியது.  ‘‘ஏய்... ஏய்... ஏன் எங்களை மரத்தில் கட்டுகிறீர்கள்?’’ என்றார் எமதர்மர். ‘‘நீங்கள் மாட்டின் மீதேறி வந்ததற்காகத்தான் உங்களை கட்டி வைத்திருக்கிறோம். மாடு ஒரு புனித விலங்கு அதன்மீது ஏறி வர உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?.’’ என்றனர் அக்கூட்டத்தினர். ‘‘அடேய் இது எருமை மாடுடா’’ என்றார் எமன். அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது மாடுன்னா நாங்க அடிப்போம் என்ற அக்கூட்டத்தின் தலைவன் ‘‘யாராவது ரெண்டுபேர்போய் பக்கத்து பெட்ரோல் பங்கில் 5 லிட்டர் பெட்ரோல் வாங்கியாங்க. இவர்கள் இருவரையும் எமலோகம் அனுப்பி வைப்போம்.’’ என்றான்.

பயந்து போன எமதர்மர் ’’சித்ரகுப்தா என்ன நடக்கிறது இங்கே?’’ என்று கேட்க, அதற்கு சித்ரகுப்தன், ‘‘தர்மரே இவர்கள் ‘மாடு குண்டர்கள்’ இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாடுகளை துன்பப்படுத்துகிறவர்களை மற்றும் இறைச்சியாக வெட்டி விற்பவர்களை அடித்தே கொன்றுவிடுவார்கள் அல்லது இப்படி கட்டி வைத்து எரித்து கொன்றுவிடுவார்கள் நம்முடைய லெட்ஜர் கணக்குப்படி 171 பேரை இதுபோல் கொன்றிருக்கிறார்கள். 171 பேரில் யாரும் ஆயுள் முடிந்தவர்கள் அல்ல.’’  ‘‘கும்பல் கொலை என்று சொல்கிறார்களே அது இதைத்தானா? சித்ரகுப்தா 171 என்ற கணக்கு 173ஆவதற்குள் இங்கிருந்து தப்பிப்போம். நான் கயிற்றை அறுக்கிறேன். நீ எருமை வாகனத்தை ஓட்டிவா பறந்துவிடலாம்’’ என்று கூற. ‘‘அரசே எருமை வாகனத்தை இப்போது எடுத்து வரமுடியாது. அங்கே பாருங்கள் அவர்கள் அந்த வாகனத்தை வைத்து பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கயிறை அறுங்கள் பக்கத்தில் ஏதோ ரயில் போகிற சத்தம் கேட்கிறது. நாம் அதில் ஏறிப்போய்விட்லாம்’’ என்று சித்ரகுப்தன் கூற கயிறை அறுத்துக்கொண்டு வேகமாக ஓடி ரயிலில் ஏறிக்கொண்டார்கள் எமதர்மரும், சித்ரகுப்தனும்.

ரயில் ஆந்திரா வந்து நின்றதும். பிளாட்பாரத்திலிருந்து சிலபேர் ரயிலுக்குள் ஏறி உள்ளே இருந்த பயணிகள் அனைவருக்கும் சாப்பிட சுவீட் கொடுத்தார்கள். ‘‘என்ன சித்ரகுப்தா விசேஷம். எல்லாருக்கும் இரயிலில் இனிப்பு தருகிறார்கள்.’’ என்று கேட்க, ‘‘இந்த இனிப்பு நான்கு பேர் கொல்லப்பட்டதற்காக கொடுக்கிறார்கள் அரசே.’’ என்னது ‘‘என்னது இறந்து போனதற்காக இனிப்பா?’’ ‘‘ஆமாம் அரசே. தெலுங்கானாவில் ஒரு கால்நடை பெண் மருத்துவரை நான்கு பேர் வன்புணர்வு செய்து கொன்று எரித்து விட்டார்கள். அவர்கள் நான்கு பேரையும் போலீசார் பிடித்து போலி எண்கவுண்டரில் கொன்றுவிட்டார்கள். கோர்ட்டுக்கு போனால் தீர்ப்பு வர 25 வருடங்களாவது ஆகும் என்று இவர்களே தீர்ப்பு எழுதி விட்டார்கள். அதற்காகத்தான் இந்தக் கொண்டாட்டம்.’’ ‘‘இது எமதர்ம சட்டத்திற்கு எதிரானது சித்ரகுப்தா. ஒரு பெண்ணை வன்புணர்வு செய்து எரித்துக் கொன்றதும் குற்றம். அந்தப் பெண்ணைக் கொன்றவர்களை உரிய விசாரணையின்றி சுட்டுக்கொன்றதும் குற்றம்.’’

‘‘இது மட்டுமில்லை அரசே இதோ பேப்பர்ல பாருங்க, தமிழ்நாட்டுல 20 அடி உயர வர்க்கபேத சுவரை சட்டத்திற்கு புறம்பா கட்டி அது இடிஞ்சு விழுந்து அதன் ஒரத்தில் கட்டப்பட்டிருந்த குடிசைகளில் இருந்த 17 பேர் இறந்து போயிருக்காங்க. இன்னொரு இடத்துல ஒரு பேருந்து சரியான பராமரிப்பு இல்லாம ஓட்டி பிரேக் பிடிக்காம ஆத்துக்குள்ளாகி 57 பேர் இறந்து போயிருக்காங்க. டாஸ்மாக் கடைகளை தெருத்தெருவுக்கும் திறந்து வச்சு பலபேர் இறந்துபோக காரணமா கவர்ன்மெண்டே செயல்படுது. இவையெல்லாம் தொடர்கதையா நடந்துகிட்டே இருந்தா நாம என்ன பண்ணறது’’

‘‘அப்படின்னா சிவலோகத்துல இருந்து அனுப்பியிருக்கிற நோட்டீஸ் சரிதான். சரி சரி வா இன்னும் இரண்டரை நாழிகைதான் இருக்கு, உடனே எமலோகத்துக்கு போய் இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்ட விரிவான அறிக்கை ரெடிபண்ணி சிவபெருமானுக்கு அனுப்பலாம்.’’ என்று எமதர்மன் கூற இருவரும் எமலோகம் விரைந்தனர். எமலோகத்தில் எமதர்மனின் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தது. அலுவலக சுவரில் அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்து அதில், ‘‘பூலோகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பிறப்பு விகிதத்தைக்காட்டிலும் இறப்பு விகிதம் அதிகமாகி விட்டதால் அரசாணை எண்.56ன் படி எமதர்மராஜா பணியிடமும் அவருடைய உதவியாளர் சித்ரகுப்தன் பணியிடமும் தேவையில்லாத பணியிடங்களாக கண்டறியப்பட்டு அந்தப் பணியிடங்களும், பதவிகளும் ஒழிக்கப்படுகின்றன. எமலோக துறை இன்றுடன் மூடப்படுகிறது. எமலோகம் சம்பந்தப்பட்ட மிச்சமீதி பணிகளை சிவலோகத்தில் இருப்பவர்கள் இனி பார்ப்பார்கள் என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.’’ தங்கள் வேலை பறிபோய்விட்டதை அறிந்த எமதர்மனும் சித்ரகுப்தனும் ஒருவரைப் பார்த்து ஒருவர் தேம்பியழ ஆரம்பித்தனர்.