1. உணவைக் கட்டுப்படுத்தி, கணையத்திற்கு அதிக வேலை கொடுக்காமை. இதில் குணம் இல்லையேல் இன்சுலின், ஊசி மூலம் செலுத்த வேண்டும். இன்சுலின் அவசியம் இல்லாத பொழுது மாத்திரைகள் கொடுப்பது நல்லது. இத்துடன் இந்நோயைக் கட்டுப்படுத்தச் சீரான உடற்பயிற்சியும் ஓரளவு உதவும்.
2. இந்நோயின் கேடுகளிலிருந்து நோயாளி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் நோயைச் சரிவரக் கட்டுப்படுத்தவும் சிறுநீர்ச் சோதனையை அடிக்கடி செய்வதுடன் இரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு, உப்பு ஆகியவற்றின் நிலையையும் அறிந்துகொள்ள வேண்டும். மருத்துவம் சரிவரச் செய்துகொண்டு வருபவர்கள் கூட மருத்துவரை வருடத்திற்கு மூன்று முறையேனும் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
நீரழிவு நோய்க்கு மிகவும் அவசியமானதாகக் கருதப்படும் இன்சுலின் என்றால் என்ன? அது எவ்வாறு கிடைக்கிறது? கணையம் என்ற உறுப்பு நம் உடலில் கல்லீரலுக்கும் மண்ணீரலுக்கும் நடுவில் இரைப்பையில் அடிப்புறத்தில் உள்ளது. இக்கணையத்திலிருந்துதான் நம் உடலுக்குச் சேர வேண்டிய இன்சுலின் சுரக்கிறது. இன்சுலின் பாண்டிங், பெஸ்ட் என்பவர்களால் 1921ல் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இன்சுலின் நீரிழிவு நோயைப் போக்கவல்ல மருந்து அல்ல. வியாதியைக் கட்டுப்படுத்தும் அருமருந்தேயாகும். நோயாளிகளுக்கு உதவும் இன்சுலின் மாடு, பன்றி போன்ற மிருகங்களில் கணையங்களிலிருந்து எடுக்கப்படுகிறது. இன்சுலின் நோயாளிகளுக்கு உடன் வேலை செய்யக்கூடியதாகவும், மிதமாக வேலை செய்யக்கூடியதாகவும் கிடைக்கிறது. இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருந்து அதனால் மயக்கம் உண்டானால் இன்சுலின் உடனடி பலனளிக்கும் ஓர் உயிர்காக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இதைத்தவிர உடலில் புண், நீரிழிவு, அறுவை சிகிச்சை வலிப்பு நோய், எடை குறைந்த வயதான நோயாளிகளுக்கும் பேறு காலம் போன்ற பொழுதும் உதவும். மிதமாக வேலை செய்யும் இன்சுலின்கள் உணவு மாத்திரைகளுக்குக் கட்டுப்படாத நோயாளிகளுக்கு உதவும். ஒரு முறை இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் அதையே உபயோகப்படுத்த வேண்டும் என்ற தேவையில்லை. இன்சுலின் ஊசி 1 சி.சி.க்கு குறைவாக நோய் கட்டுப்பட்டு வந்த பிறகு மாத்திரைகளே போதுமானது. ஆனால், நீரழிவு மாத்திரைகள் செயல்பட உடலில் வேறு எந்தக் கோளாறுமின்றிப் புண்ணோ, காயமோ இருந்தாலும் கூடாது. எத்தனையோ மாத்திரைகள் நீரழிவு நோய்க்கு இருப்பினும் இன்சுலினுக்கு மாற்றாக எல்லா நேரங்களிலும் உபயோகப்படுத்தக்கூடியதாக ஒன்றும் இல்லை. அதனால்தான் நீரழிவு நோயாளிகளில் 50 சதவிகிதம் பேர் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டியதாக உள்ளது. மாத்திரைகளால் நோயைக் கட்டுப்படுத்தும் நோயாளிகள் கூட அவசரகாலங்களில் இன்சுலினைத் தேடிப் போக வேண்டியதாக உள்ளது. ஆகவே நீரழிவு நோயாளிகள் இன்சுலினைத் தாங்களே ஊசி மூலம் எப்படிப் போட்டுக் கொள்வது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
சில ஊசிப்போட்டுக் கொள்ள வேண்டிய நிலை இருப்பினும் அறியாமை அல்லது வெட்கம் காரணமாக மருத்துவரிடம் செல்லாது நோயை வளர்த்துக் கொள்வார்கள். இவர்கள் தாங்களாகவே ஊசி போட்டுக் கொள்ள தெரிந்திருப்பின் தடையின்றி, செலவின்றிப் போட்டுக் கொள்ளலாம்.மருத்துவர் நீரிழிவு நோயைக் கண்டுபிடித்தவுடன் உணவுக் கட்டுப்பாட்டைத்தான் கூறுவார். ஏனெனில் கணையத்தில் ஊறும் இன்சுலின் பற்றாக்குறையால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையைச் சரியாக உடல் திசுக்களால் உபயோகப்படுத்த முடியாது போய்விடுகிறது. அதனால், உடல், சர்க்கரைச் சத்து இல்லாது வாடும்பொழுது மற்ற சத்துக்களும் பயன்படுத்தப்படாமல் வீணாகக் கூடும். இதைச் சரிசெய்ய இன்சுலின் அதிக அளவு கணையத்திலிருந்து சுரக்க வேண்டும். இதற்காகவே ‘உணவுக்கட்டுப்பாடு’ மருத்துவர்களால் வலியுறுத்தப்படுகிறது. அப்படியென்றால் இந்நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய உணவுக் கட்டுப்பாடுகள் என்ன? மாவுப்பொருள் அதிகம் உள்ள அரிசி, கோதுமை ரொட்டி, பன், சப்பாத்தி போன்றவற்றை அதிகம் உண்ணக்கூடாது, அதனால்தான் அரிசியை உணவாகக் கொண்ட நோயாளியை அதற்குப் பதில், கேழ்வரகு அல்லது கோதுமையை உணவாகப் பயன்படுத்த மருத்துவர்கள் கூறுவர். இந்த உணவு மாற்றத்தால் உணவின் அளவு குறையும் என்பதும் மற்றொரு காரணமாகும். கிழங்கு, பழவகைகள் ஆகியவற்றிலும் சர்க்கரை அதிகம் உள்ளது. ஆகவே அவற்றையும் அளவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பானங்களில் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுதல் கூடாது, உடலில் கொழுப்புச் சத்து அளவாக உள்ளவர்கள் முட்டை, மீன், இறைச்சி போன்றவற்றை எப்பொழுதும் போல் உண்ணலாம். காய்கறிகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் கிடையாது. பொதுவாக இந்நோயாளிகள் உணவில், மாவுச்சத்து 180 கிராமும் புரதம் 60 கிராமும், கொழுப்பு 80 கிராமும் இருப்பது நல்லது. இதைவிடுத்து, உணவைக் கட்டுப்பாடு இன்றி, உண்டுவிட்டு, மாத்திரைகளாலும் ஊசிகளாலும் நோயைக் கட்டுப்படுத்திவிடலாம் என்பது அறிவுடைமையாகாது, அதுவும் நோயாளி பருமனாக இருப்பின், உணவு அளவு முறைப்படி கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும், இவர்கள் உணவில் நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்த் தவிர்த்து, சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய்களைப் பயன்படுத்தலாம்.
உணவுக் கட்டுப்பாட்டிற்கு அடுத்தபடியாக, இந்நோயாளிகளுக்கு உடற்பயிற்சியும் அவசியம் தேவை. நம் நாட்டில் மருத்துவத் தந்தை சுச்சுருத்தா என்ற விஞ்ஞானி 2500 வருடங்களுக்கு முன்பே பருமனாக இருக்கும் நோயாளிக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம் என்று கூறியுள்ளார். ஆனால், அதிகம் கூடாது. ஏனெனில் அது இருதயத்தையும் இரத்தக்குழாயையும் பாதிக்கும், உடற்பயிற்சி செய்பவர்கள் மருந்தையும் குறைத்துச் சாப்பிட வேண்டும், இந்த உடற்பயிற்சிகளில், நடப்பதும், யோகாசனம் செய்வதும் மிகச் சிறந்தவை, இவற்றை அனுதினமும் செய்தல் அவசியம். உடற்பயிற்சிக்குப் பிறகு, அதிகம் சாப்பிட்டால் பலனே இல்லாமல் போய்விடும், படுத்த படுக்கையில் உள்ள நோயாளிக்கும் உடற்பயிற்சி தேவைதான். இல்லையேல் தசைகள் வலுவிழந்துவிடும்.இதுவரை நீங்கள் நீரழிவு நோயின் தன்மை, அதன் அறிகுறிகள், மருத்துவம் போன்றவற்றைப் படித்தீர்கள், இப்பொழுது இந்நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய சில நெறிமுறைகளைப் பற்றிக் காண்போம். தினமும் நோயாளிகள் சுத்தமாகக் குளிக்க வேண்டும். குளித்த பிறகு கால்களில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். படர்தாமரை, தேமல் போன்ற சரும நோய்கள் இருந்தால் உடனடியாகக் கவனித்து மருத்துவம் பெற வேண்டும். பற்களை தினமும் இருமுறை துலக்க வேண்டும்.சின்ன சிராய்ப்பு ஏற்பட்டாலும் உடனடியாக சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். எரிச்சல் உண்டாகக்கூடிய கிருமி நாசினிகளைப் புண், சிராய்ப்பு மீது பூசக்கூடாது, காலணிகள் இறுக்கமாக அணிந்துகொள்ளக்கூடாது, காலணி இல்லாமல் நடக்கக்கூடாது, நகங்களை வெட்டும்பொழுது நீரில் நனைத்த பிறகுவெட்ட வேண்டும். மேலும் சதையை ஒட்டி வெட்டக்கூடாது. காலணிகளைப் போக்கும் மருந்து, வலிபோக்க வெந்நீர்ப்பை ஒத்தடம் போன்றவை உபயோகப்படுத்தக்கூடாது.நோயாளிகள் உடற்பயிற்சி; உணவுக் கட்டுப்பாடு மூலம் நாளடைவில் மாத்திரை, ஊசிகளைக் குறைத்துவிடலாம். எந்தக் கட்டத்திலும் மருத்துவத்தை விட்டுவிடலாகாது, மருத்துவர் கூறுகிறபடி மருத்துவத்தை இவர்கள் பெற்றுவந்தால், ஆரோக்கியமானவர்களைப் போலவே நல்வாழ்வு வாழ முடியும்.
தஞ்சை டாக்டர் சு.நரேந்திரன்
எம்.எஸ்., பி.எச்.டி, சிறப்பு நிலைப் பேராசிரியர்
தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -1