tamilnadu

img

ஆழியாறு அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு

சென்னை, ஆக. 17- பாசனத்திற்காக கோவை ஆழியாறு அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஆக.18)  முதல் தண்ணீர் திறக்க முதல்வர்  எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கோயம்புத்தூர் மாவட்டம், ஆனை மலை வட்டம் ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு பழைய ஆயக்கட்டு ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி ஆழியாறு பழைய ஆயக்கட்டு  பாசன விவசாயிகள் நலச் சங்கம் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.  வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழி யாறு 5 பழைய வாய்க்கால்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல்போக பாசனத்திற்கு 18.8.2019 முதல் 31.12.2019 முடிய 135 நாட்களுக்கு, தற்போதைய நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்தினைப் பொறுத்து, ஆழியாறு அணையிலிருந்து 1059 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன். இதனால் கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை வட்டத்தில் உள்ள 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை  சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை  மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய்  கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.