சென்னை,அக்.26- மத்திய அரசின் பண மதிப்பீடு நடவ டிக்கையை தொடர்ந்து பழைய ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, புதிதாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. புதிய 500 ரூபாய் நோட்டுகளும், வெளியிடப்பட்டன. இத னால் 2 ஆயிரம் ரூபாய், புதிய 500 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் அதிகமாகின. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கருப்பு பணமாக சிலர் ஒதுக்குவதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. கடந்த சில தினங்களாக ஏ.டி.எம்களில் 2 ஆயிரம் ரூபாய் வருவது குறைந்து விட்டது. பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டு களே வருகின்றன. இதனால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்துள்ளது.
இந்த நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டதாக தகவல் வெளியானது. ஏற்கனவே அடித்த நோட்டுகளை திரும்ப பெறுவதாகவும் தகவல்கள் கூறப்பட்டன. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்து இருப்பதால் இந்த நோட்டு களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியது. இதற்கிடையே வருகிற ஜனவரி 1 ஆம் தேதி ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. அதன்பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படும். எனவே பொது மக்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிவிடுங் கள் என்று ‘வாட்ஸ்அப்’ மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மீண்டும் வெளியிடுவது குறித்து எங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. அவ்வாறு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வந்தாலும், தற்போது புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாதது ஆகிவிடாது. அதுகுறித்து மத்திய அரசு அறிவித்தால் செல்லாததாகும். அதுவரை புழக்கத்தில் இருக்கும். எனவே, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது போன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்” என்றார்.