பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மீண்டும் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 4 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடத்த மக்கள் பெருமளவில் நேற்று இரவு கூடினர். அந்த மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக போலீசார் வேனில் வந்தனர். ஏற்கனவே வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை ரிமோட் கட்டுப்பாடு மூலம் வெடிக்கச் செய்து அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர். போலீஸ் வேனை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 4 போலீசார் உடல் சிதறி பலியாகினர். 11 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக குவெட்டா காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மூன்று தினங்களில் பாகிஸ்தானின் குவெட்டா நகரில் நடத்தப்படும் 2-வது மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். போலீசாரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்தார்.