அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகில் தனது மேலாதிக்க நாட்டாமையை சிறிது கூட விட்டு தருவதில் அமெரிக்கா முன்வராது என்பது அனுபவம் வாயிலாக உலகம் அறிந்த உண்மை. தொழில் புரட்சிக்கு பின்பு அறிவியல் தொழில் நுட்பத்தில் ஐரோப்பிய நாடுகள் மேலாதிக்கம் செலுத்தின. ஆனால் இரண்டாவது உலகப்போருக்கு பின்பு இந்த மேலாதிக்கம் அமெரிக்காவின் கைகளுக்கு சென்றுவிட்டது. மனிதகுல வரலாற்றின் ஒரு கட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா மற்றும் சீனா உட்பட கீழைத் தேசங்களின் கை மேலோங்கியிருந்தது. எனினும் தொழில் புரட்சி காலகட்டத்தில் கீழைத் தேசங்கள் பின் தங்கி விட்டன. இந்தியாவை பற்றி 1858ல் காரல் மார்க்ஸ் குறிப்பி டும் பொழுது கடந்த 300 ஆண்டுகளாக இந்தியா ஏன் ஒரு அறிவியல் அல்லது தொழில்நுட்ப கண்டுபிடிப்பை கூட படைக்க இயலவில்லை என நியாயமான கேள்வியை எழுப்பு கிறார். இந்தியாவில் அறிவியல் வீழ்ச்சிக்கும் பொருள் முதல்வாத கோட்பாட்டின் வீழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்கிறார் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா! எந்தவொரு அறிவியல் அல்லது தொழில் நுட்ப முன்னேற்றமும் மனித குலம் முழுமைக்கும் பயன்பட வேண்டும். ஆனால் முதலாளித்துவ உலகில் அவ்வாறு நடப்பது இல்லை. குறிப்பாக அமெரிக்கா இந்த கண்டு பிடிப்புகளை தமது இரும்புப் பிடிக்குள் வைத்துக் கொள்வ தன் மூலம் ஏனைய நாடுகளை குறிப்பாக கீழைத் தேசம் மற்றும் வளரும் நாடுகளை தனக்கு கீழ்படியுமாறு உத்தர வாதப்படுத்திக் கொள்கிறது.
சீனாவின் புயல் வேக வளர்ச்சி
ஆயினும் அமெரிக்காவின் இந்த நாட்டாமைக்கு ஒரு பெரிய சவால் சீனாவிடமிருந்துதான் கிளம்பியுள்ளது. 1980 களில் சீனா சோசலிச பொருளாதாரத்திற்கு உட்பட்டு சந்தைப் பொருளாதாரத்தை அமலாக்கியது. சீன சமூகத்தில் சோசலிச உற்பத்தி உறவுகள் நிலவினாலும் உற்பத்தி சக்திகள் மிகவும் பின் தங்கியவையாகவே இருந்தன. இந்த முரண்பாடு சோசலிசத்திற்கே ஆபத்தாக முடியும் என்பதை உணர்ந்த சீனா சந்தைப் பொருளாதாரத்தை அமலாக்க முன்வந்தது. தனது மிகப்பெரிய சந்தையை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பிற நாடுகளின் தொழில் நுட்பத்திற்கு திறந்தது. இதன் விளைவாக ஏராளமான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் சீனாவில் அபரிமிதமாக முதலீடு செய்தன. சீனச் சந்தையும் அதன் உழைப்பாளிகளின் மலிவான உழைப்புச் சக்தியும் இந்த நிறுவனங்களின் இலக்கு ஆகும். அதனூடே சீன சோசலிசத்திற்கு ஒரு பின்னடைவை உரு வாக்க முடியுமா எனும் நோக்கமும் இருந்தது. நவீன தொழில் நுட்பம் என்பது சீனாவின் இலக்காக இருந்தது. இந்த நோக்கங்களிடையே முரண்பாடுகள் இருந்தன. தியானன் மென் சதுக்க கலவரங்கள் வடிவத்தில் அவை வெடிக்கவும் செய்தன. எனினும் அறிவியல் தொழில் நுட்பத்தில் அசாத்தி யமான முன்னேற்றத்தை கைக் கொள்ள சீனாவால் முடிந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. இன்று அறிவியல் தொழில் நுட்ப உலகில் அமெரிக்கா வுக்கு இணையாக சீனா வளர்ந்துள்ளது என்பது மிகப்பெரிய சாதனை ஆகும். முதன் முதலாக அமெரிக்க ஆதரவு வட்டத்திற்கு வெளியே உள்ள ஒரு கீழைத் தேசம் அமெரிக்கா வுக்கு சவாலாக உருவாகியுள்ளது. இந்தச் சூழலில்தான் 2008 பொருளாதார நெருக்கடி உருவானது. இது அமெ ரிக்காவில் அதீத தேசியவாதம் வளர்வதற்கும் அதன் விளைவாக டிரம்ப் ஜனாதிபதி ஆவதற்கும் வழி வகுத்தது.
அமெரிக்காவின் வர்த்தகப் போர்
சீனாவின் வளர்ச்சி தனது மேலாதிக்கத்திற்கு ஆபத்து என்பதை உணர்ந்த டிரம்ப் தலைமையிலான அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதி சீனா மீது வர்த்தகப் போரை துவக்கியது. அது தற்பொழுது அறிவியல் தொழில் நுட்பப் போராகவும் பரிணமித்துள்ளது. இதன் மையப் பொருளாக இருப்பது ஹுவாய் (Huwai) நிறுவனம் வெளியிட்டு வரும் 5ஜி தொழில்நுட்பம் ஆகும். இன்று உலகம் முழுதும் 4ஜி தொழில் நுட்பம்தான் உள்ளது. இந்தியாபோன்ற தேசங்களில் 3ஜியும் கூட இன்னும் உள்ளது. இந்தச் சூழலில் 5ஜி தொழில் நுட்பத்தை உருவாக்க மிக வேகமான தலை தெறிக்கும் தொழில்நுட்பப் பந்தயம் உருவானது. சீனாவின் ஹுவாய், ஐரோப்பிய நாடுகளின் எரிக்சன் மற்றும் நோக்கியா, அமெரிக்காவின் குவால்கேம் (Qualcomm), ஹெச்.பி. (Hewlett Packard) ஆகிய நிறுவனங்கள் இந்த பந்தயத்தில் இருந்தன. ஹுவாய் இந்த பந்தயத்தில் முந்திவிட்டது. இதனை அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. நவீன தொழில்நுட்பக் காலத்தில் தான் அல்லாத, அதுவும் சோசலிசத்தை பின்பற்றும் ஒரு கீழை தேசத்தின் நாடு 5ஜி போன்ற மிகப்பெரிய தொழில்நுட்பத்தின் தலைவ னாக பரிணமிப்பதை அமெரிக்கா அங்கீகரிக்கத் தயாராக இல்லை. எனவே ஹுவாய் நிறுவனத்தை முடக்குவதற்கு அனைத்து சூழ்ச்சிகளையும் அமெரிக்கா செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஹுவாய் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியை (இவர் ஹுவாய் முதலாளியின் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது) கனடாவை நிர்பந்தித்து கைது செய்தது அமெரிக்கா. சீனா பதிலுக்கு இரண்டு கனடா நாட்டி னரை கைது செய்ய வேறு வழியின்றி கனடா அவரை விடுதலை செய்தது. இதன் பின்னர் டிரம்ப் ஹுவாய் நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் இணைத்தார். இதன் பொருள் என்ன? எந்த தேசம் அல்லது நிறுவனம் ஹுவாய் நிறுவனத்துடன் வர்த்தகத் தொடர்பு கொள்கிறதோ அவர்களுக்கு அமெரிக்கா எந்த உதவியும் செய்யாது. இது அமெரிக்க நாட்டாமை காலம் காலமாக செய்து வரும் மிரட்டல் மற்றும் சர்வாதிகாரம் ஆகும். தனக்குச் சாதகமாக இருக்கும் வரைதான் முதலாளித்துவ நாடுகள் “சுதந்திர வர்த்தகம்” என கோட்பாடு பேசும். தனது மேலாதிக்கத்திற்கு ஆபத்து எனில் அதே “சுதந்திர வர்த்த கத்தை” குப்பைத் தொட்டியில் போட்டுவிடும். சுதந்திர வர்த்தகம்தான் சரியான திசை வழி எனில் அமெரிக்கா என்ன செய்திருக்கலாம்? சீனாவின் 5ஜி தொழில்நுட்பத்தை பின்னுக்கு தள்ள 6ஜி அல்லது 7ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கலாம்; அல்லது 5ஜி தொழில் நுட்பத்தை சீனாவைவிட விலை குறைவாக தரலாம். ஆனால் அமெரிக்கா அதற்கு தயாராக இல்லை. எனவே சீனாவின் மீது வர்த்தக மற்றும் தொழில்நுட்பப் போரை அறிவித்துள்ளது.
அடிபணிய மறுக்கும் சீனா!
அமெரிக்காவின் மிரட்டலுக்கு சீனா அடிபணிய மறுத்து விட்டது. 5ஜி தொழில்நுட்பத்தை வேறு நாடுகளுக்கு பர வலாக்க அனைத்து முயற்சிகளையும் சீனா செய்து வரு கிறது. அமெரிக்காவின் தடையை மீறி தனது 5ஜி தொழில் நுட்பத்தை 30 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு இத்தகைய ஒப்பந்தத்தில் சீனாவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் 5ஜி தொழில்நுட்பத்தில் தனது தலைமைப் பாத்திரத்தை சீனா நிலை நாட்டியுள்ளது எனில் மிகை அல்ல. 5ஜி தொழில்நுட்பத்தில் சீனாவின் இடத்தைப் பிடிக்க அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகும் என கூறப்படு கிறது. தனது மேலாதிக்கமும் வர்த்தக இலாபமும் தன்னிட மிருந்து நழுவுகிறதே எனும் கோபம்தான் அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு முக்கியக் காரணம் ஆகும். எனினும் சீனாவுக்கு ஒரு சவாலான சூழல்தான் இது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது. ஏனெனில் 5ஜி தொழில் நுட்பத்தின் அடிப்படையை சீனா தன்னிடம் கொண்டிருந்தாலும் அதனை அமலாக்குவதில் பயன் படுத்தப்படும் மென்பொருளான ஆண்ட்ராய்ட் மற்றும் சில்லு தொழில்நுட்பத்திற்கு அமெரிக்காதான் காப்புரிமை கொண்டுள்ளது. எனவே சீனா மாற்று மென்பொருளை உருவாக்க வேண்டும். அது சாத்தியமற்றது அல்ல! ஏற்கெ னவே ஆப்பிள் நிறுவனம் ஆண்ட்ராய்டுக்கு மாற்றாக தனது சொந்த மென்பொருளையே பயன்படுத்துகிறது. அது போல சீனாவும் மிக வேகமாக மாற்று மென்பொருளை உருவாக்க வேண்டும். அதுவும் இன்னும் 12 முதல் 18 மாதங்களுக்குள் இதனை செய்ய வேண்டும். இதனிடையே பல நாடுகள் அமெரிக்காவுக்கு பயந்து சீனாவின் 5ஜி தொழில்நுட்பத்தை தவிர்க்கும் ஆபத்து உள்ளது. 5ஜி பயன்படும் அலைபேசி சந்தையில் சீனாவுக்கு எந்த பிரச்சனையும் இருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் சீனாவின் உள்நாட்டு சந்தை மிகப்பெரியது. எனினும் 5ஜியின் ஏனைய பயன்பாடுகளில் சீனா வெளிநாடுகளிலும் தனது தொழில்நுட்பத்தை நிலைநாட்டுவதில் வெல்ல வேண்டும். அது மிக முக்கியமானது. எனினும் அது மிகப் பெரிய சவால் ஆகும்.
வெல்லப்போவது யார் ?
அமெரிக்காவின் நரி நாட்டாமை வெல்லுமா? அல்லது சீனாவின் எதிர் சவால் வெல்லுமா? இந்த கேள்விக்கு விடை காண்பது மிகவும் கடினம்! அமெரிக்க சமூகத்தின் சிந்தனை, தம்மை காக்க வந்த ஆபத்பாந்தவன் என தவறாக நம்பும் அமெரிக்க உழைப்பாளிகள், டிரம்புக்கு தரும் ஆதரவின் அளவு மற்றும் சீனாவின் சீரான அரசியல் பொருளாதார வளர்ச்சி என பல காரணிகள்தான் இந்த வெற்றியைத் தீர்மானிக்கும்.
எனினும் இரண்டு உண்மைகள் தெளிவாக முன்வந்துள்ளன.
1) அறிவியல் தொழில் நுட்பத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை கீழைத் தேசங்கள் பின்னுக்குத் தள்ள முடியும் என்பதை சீனா நிலை நாட்டியுள்ளது.
2) அமெரிக்கா துவக்கியுள்ள வர்த்தகப் போர் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு மட்டுமல்ல; உலகம் முழுமைக்குமே கடும் பாதக விளைவுகளை உருவாக்கும் ஆபத்து உள்ளது. ஏனைய தேசங்கள் அமெரிக்காவை கட்டுப்படுத்துமா அல்லது அமெரிக்காவின் நாட்டமையை ஏற்றுக்கொள்ளுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.
அமெரிக்காவுக்கு கீழைத் தேசமான சீனா கடும் சவால் விடுகிறது. ஆனால் மற்றொரு மகத்தான கீழைத் தேசமான இந்தியா அமெரிக்காவுக்கு இளைய பங்காளியாக மாறிக் கொண்டிருக்கும் வேதனை தரும் நிகழ்வும் அரங்கேறி வருகிறது. “ 56 இன்ச் மார்பு” உடையவர்களின் சவடால் எங்கே போய் ஒளிந்து கொண்டது? ஒரு தேசம் அறிவியலில் முன்னேறுவதற்கு தேவை போலி தேசியம் அல்ல! ஏகாதிபத்தியத்திற்கு தைரியமாக சவால்விடும் சுயசார்புத் தன்மை கொண்ட தேசியம்தான். அதனை இன்றைய ஆட்சியாளர்களிடம் எதிர்பார்த்தால் அது நம்முடைய தவறுதான்!
ஆதாரம்: பீப்பிள்ஸ் டெமாக்ரசி மற்றும் பிசினஸ் லைன்