1962 அணுசக்தியால் இயங்கும் முதல் ராணுவம் சாராத கப்பலான அமெரிக்காவின் என்.எஸ்.சவானா, தனது முதற் கடற்பயணத்தைத் தொடங்கியது. அட்லாண்ட்டிக் கடலை முதலில் கடந்த நீராவிக் கப்பலான எஸ். எஸ். சவானா நினைவாக இக்கப்பலுக்கு அதே பெயர் சூட்டப்பட்டது. அணுசக்தியின் மக்களுக்கான பயன்களைச் செயல்படுத்திக்காட்டும் முயற்சியாகவே உருவாக்கப்பட்ட இக்கப்பலை உருவாக்க, இதில் பொருத்தப்பட்ட அணு உலை உட்பட, 4.69 கோடி டாலர்கள் (தற்போது ரூ.3,560 கோடி!) செலவானது. சோதனை முயற்சி என்பதால், முழுமையான சரக்குக் கப்பலாகவும் இல்லாமல், வசதியான பயணிகள் கப்பலாகவும் இல்லாமல் இது உருவாக்கப்பட்டிருந்தது. கப்பல்களை இயக்க அணுசக்தியைப் பயன்படுத்துவதற்கான ஆய்வுகளை 1940களிலேயே அமெரிக்கா தொடங்கிவிட்டது.
கப்பல்களில், குறிப்பாக நீர்மூழ்கிகளில், எரிபொருளைச் சேமிப்பதற்கு ஏராளமான இடம் வீணாக்கப்பட்டதுடன், மூழ்கிய நிலையில் மின்கலங்களை மட்டுமே பயன்படுத்தியதால் அவற்றை அடிக்கடி மின்னேற்றம் செய்யவும் வேண்டியிருந்தது. இவை, ஊழியர்கள், ஆயுதங்கள் ஆகியவற்றுக்கான இடத்தைக் குறைத்ததன்மூலம், கப்பல்களின் செயல்திறனுக்கு இடையூறாக இருந்தன. அணுசக்தியால் இயங்கும் உலகின் முதல் நீர்மூழ்கிக் கப்பலை 1954இலேயே அமெரிக்கா உருவாக்கிவிட்டதும், அணுசக்தியின் பயன்பாட்டுக்குப் பின்னரே, மேலே வராமல் தொடர்ந்து நீரில் மூழ்கியிருக்கும் உண்மையான நீர்மூழ்கிகளாக மாறியதும் இத்தொடரில் 2018 செப்டம்பர் 30இல் இடம்பெற்றுள்ளது. நீர்மூழ்கிகளின் மூழ்கும் செயலுக்கே பேருதவியாக இருந்ததால் அவற்றில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டாலும், வழக்கமான கப்பல்களில் அணுசக்தியைப் பயன்படுத்துவதில் பெரிய ஆர்வம் இல்லாமலிருந்த நிலையில்தான், சோதனை முயற்சியாக சவானா உருவாக்கப்பட்டது.
பனிபடர்ந்த பகுதிகளில், கப்பல்கள் செல்வதற்கு வழியேற்படுத்த, பனிக்கட்டிகளை உடைக்கும் கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதிக சக்தி தேவைப்படும் இப்பணிக்காக, லெனின் என்ற அணுசக்தியால் இயங்கி பனிக்கட்டி உடைக்கும் கப்பலை, சோவியத் ஒன்றியம் 1957இலேயே உருவாக்கிப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தது. சவானாவின் உருவாக்கமே சரக்குக் கப்பல்களில் அணுசக்தியின் பயன்பாட்டைத் தொடங்கிவைத்தது. அணுஉலைகள் ஆண்டுக்கணக்கில் இயங்கும் என்பதால், எரிபொருள் நிரப்பும் தேவையின்றி மிக நீண்டகாலம் இக்கப்பல்கள் இயங்கினாலும், எரிபொருள் செலவில் சேமிக்கப்படுவதைவிட, அணுஉலையைப் பராமரிக்க அதிகமான செலவு ஏற்படுவதால், பெரும்பாலும் அணுசக்தி கப்பல்கள் ராணுவங்களால் மட்டுமே தற்போது பயன்படுத்தப்படுகின்றன.