tamilnadu

img

இந்நாள் ஆகஸ்ட் 02 இதற்கு முன்னால்

1934 - குடியரசுத்தலைவர் பால் வோன் ஹிண்டன்பர்க் மறைந்ததையடுத்து, ஜெர்மன் அரசின் அனைத்து அதிகாரங்களையும் ஒருங்கேபெற்ற தலைவராக, ஃப்யூரர் பதவியேற்றார் ஹிட்லர். ஆங்கிலத்தில் பொதுவாக ஹிட்லரை மட்டுமே சுட்டக்கூடிய ஃப்யூரர் என்ற சொல், தலைவர் அல்லது வழிகாட்டி என்ற பொருளுடைய ஜெர்மன் சொல்லாகும். ஸ்காண்டிநேவிய மொழிகளின் சொல்லான இது, டச்சு, நார்வீஜிய மொழிகளில், அதே பொருளுடன் ஃபோரர் என்ற சொல்லாக உள்ளது. ஜெர்மனியில் பொதுவாகத் தலைவர்கள் ஃப்யூரர் என்றழைக்கப்படும் வழக்கமிருந்த நிலையில், 1921இல் நாஜிக் கட்சியின் ஃப்யூரராகத் தன்னை அறிவிக்கவேண்டும் என்று வற்புறுத்தினார் ஹிட்லர். ஜெர்மன் தொழிலாளர்களின் தேசிய சமூகவுடைமைக் கட்சி என்ற, நாஜிக் கட்சியைத் தோற்றுவித்த ஆண்ட்டன் ட்ரெக்ஸ்லர், மற்றொரு யூத எதிர்ப்பு, தீவிர வலதுசாரி தேசியவாதக் கட்சியான, ஜெர்மன் சமூகவுடைமைக் கட்சியுடன் நாஜிக் கட்சியை இணைக்க முடிவுசெய்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியைவிட்டு விலகினார் ஹிட்லர்.

கட்சியில் சேர்ந்து மிகக்குறைந்த காலத்திலேயே முக்கியப் பேச்சாளராக மாறியிருந்த ஹிட்லர் கட்சியைவிட்டு விலகியதைத் தொடர்ந்து, கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்றஞ்சிய கட்சியின் நிர்வாகக்குழு, எல்லையற்ற அதிகாரங்களுடன், ஹிட்லரை கட்சியின் ஃப்யூரராக ஏற்றுக்கொண்டது. ஜெர்மன் பேரரசின் உருவாக்கத்திற்கு முன்னரே ஜெர்மன் தேசியம் பேசி, அதன் முன்னோடியாகக் கருதப்படுபவரும், யூத எதிர்ப்புக்கொள்கைகளைக் கொண்டவருமான தீவிர வலதுசாரித் தலைவர் ஜார்ஜ் வோன் ஷோனரர், அவருடைய ஆதரவாளர்களால் ஃப்யூரர் என்றழைக்கப்பட்டது, ஃப்யூரர் பட்டத்தின்மீதான ஹிட்லரின் ஈர்ப்புக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அவரைப் பின்பற்றியே, கையை நேராக உயர்த்தி வணக்கம் தெரிவிக்கும் ‘ரோமன் சல்யூட்’ என்பதையும் ஹிட்லர் கைக்கொண்டார். பண்டைய ரோமானியர்களின் வணக்கம் தெரிவிக்கும் முறையாகக் குறிப்பிடப்படும் இந்த ரோமன் சல்யூட், ஹிட்லரும், முசோலினியும் பின்பற்றியபின் ஃபாசிசத்தின் அடையாளமாகிப்போனது. குடியரசுத்தலைவர் ஆட்சிமுறையைக்கொண்டிருந்த ஜெர்மனியில், 1933இலேயே  அதிகாரமளிக்கும் சட்டத்தின்மூலம் வேந்தராகி, பெரும்பாலான அதிகாரங்களைக் கைப்பற்றியிருந்த ஹிட்லர், ஹிண்டன்பர்க்கின் மறைவுக்கு முன்தினமே குடியரசுத்தலைவர், வேந்தர் ஆகிய இரு பதவிகளும், ஃப்யூரர் என்ற ஒரே பதவியாக ஒன்றிணைக்கப்படுவதாகச் சட்டத்திருத்தம் செய்து, முழு சர்வாதிகாரியானார்.

-அறிவுக்கடல்