tamilnadu

img

இந்நாள் ஜுன் 26 இதற்கு முன்னால்

1974 - பொதுவான சரக்குக் குறியீடு(யுனிவர்சல் ப்ராடக்ட் கோட்) என்ற பார்-கோட்மூலமான உலகின் முதல் விற்பனை அமெரிக்காவின் ஒகையோவில் உள்ள மார்ஷின் சூப்பர்மார்க்கெட் என்ற கடையில் செய்யப்பட்டது. அந்த முதல் விற்பனைப் பொருளான ரிக்ளீஸ் சூயிங்-கம் பாக்கெட்டும், அந்த ரசீதும் தற்போது ஸ்மித்சோனியன் நிறுவனத்தில்(அருங்காட்சியகம்) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உண்மையில் பார்-கோட் 1952இலேயே கண்டுபிடிக்கப்பட்டு, காப்புரிமையும் வழங்கப்பட்டுவிட்டது. 1948இல் ஃபுட் ஃபேர் என்னும் உணவுப்பொருட்கள் சங்கிலித்தொடர் விற்பனை நிறுவனத்திற்கு, பொருட்களை அடையாளம்காணும் தானியங்கிமுறை தேவையென்று கேள்வியுற்ற, மாணவரான பெர்னார்ட் சில்வர், தன் நண்பர் நார்மன் உட்லேண்ட்-டுடன் சேர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். முதலில் புறஊதா மையை முயற்சித்தனர். மை எளிதில் அழிந்ததுடன், செலவும் அதிகமாக இருந்தது. இறுதியாக, மோர்ஸ் தந்திக்குறியீட்டில் பயன்படுத்தப்படும் குறியீடுகளை (புள்ளிகளை கோடாகவும், கோட்டைப் பட்டையாகவும்) நீட்டி உருவாக்கியதே பார்-கோட். எத்திசையிலிருந்தும் படிப்பதற்காக, வட்டமாகவும்(புல்ஸ்-ஐ) உருவாக்கிக் காப்புரிமை பெற்றாலும் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஜிடிஇ-சில்வானியா நிறுவனத்தில் பணியாற்றிய டேவிட் காலின்ஸ், 1961இல் சிவப்பு, நீல பிரதிபலிக்கும் பட்டைகளுடன் உருவாக்கிய, ரயில் பெட்டிகளை அடையாளம்காணும் முறை, பயன்பாட்டுக்கு வந்தாலும், அவற்றின்மீது படியும் அழுக்கு முதலானவற்றால் பின்னர் கைவிடப்பட்டது. ஆனாலும், நியூஜெர்சியில் சுங்கவரியுள்ள பாலம், அமெரிக்க அஞ்சல்துறை ஆகியவை இதைப் பயன்படுத்தத்தொடங்கின. இதன், கருப்பு-வெள்ளை வடிவத்தை உருவாக்க ஜிடிஇ-சில்வானியா ஒத்துழைக்காததால் அந்நிறுவனத்தைவிட்டு வெளியேறி காலின்ஸ் உருவாக்கிய, தொலைவிலிருந்தே அடையாளம்காணவும், பார்கோடு சேதமுற்றிருந்தாலும் அடையாளம்காணவும் உதவிய ஹீலியம்-நியான் ஸ்கேனர் 1969இல் ஜெனரல் மோட்டார்சில் பயன்பாட்டுக்குவந்தது. 1972இல் உணவுச் சங்கிலியின் தேசியச் சங்கத்திற்கு தானியங்கி அடையாளம்காணும்முறை தேவைப்பட்டபோது, உட்லேண்ட்டிடமிருந்து காப்புரிமையை வாங்கிய ஆர்சிஏ நிறுவனம், அதனைக் காட்டியது. இதைப் பார்த்த ஐபிஎம், அப்போது தங்களிடம் பணியாற்றிக் கொண்டிருந்த உட்லேண்டை பயன்படுத்தி வெற்றிகரமான பார்கோடை உருவாக்கியது. நோயாளிகளின் அடையாளம் உட்பட ஏராளமானவற்றுக்கு பார்கோட் பயன்படுகிறது. பட்டைகள் மட்டுமின்றி, புள்ளிகள், சதுரங்கள் முதலானவற்றைக்கொண்ட இருபரிமாணக் குறியீடுகளும் உருவாயின. இருபரிமாணக் குறியீடுகளில் ஒரு வகையே தற்போதைய க்யூஆர்-கோட். 1995இல் உருவான ஆர்எப்ஐடி-யின் வரவு பார்கோடைவிட மேம்பட்ட வசதிகளை அளித்தது.