tamilnadu

img

கவிதையையும் வாளாக ஏந்திய ஒரு போராளியின் படைப்புகள் -அ. குமரேசன்

“இலக்கியம் ஒரு தனிமனிதருக்கோ, சமூகத்துக்கோ என்னவெல்லாம் செய்கிறது என்று பேசுகிறவர்கள் யார் யார் தெரியுமா? இலக்கியம் படைக்கிறவர்களும் படிக்கிறவர்களும்தான்!” - இப்படியொரு கருத்தைத் தூக்கிப்போட்டார் ஒரு நண்பர். அதுவொரு நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளப்பட்டு, சிரிப்பலை பொங்கியது. “ஆம், இலக்கியம் படைக்கிறவர்கள் தங்களுடைய தலைக்குப் பின்னால் ஒரு ஒளிவட்டம் இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். படிக்கிறவர்கள் ஆகா ஓகோவென்று புகழ்ந்து அந்த நினைப்பைப் பளபளப்பாக்குகிறார்கள். அதன் பிறகு அந்த ஒளிவட்டம் விழுந்துவிடக்கூடாதென்று அவர்கள் படுகிற பாடு இருக்கிறதே…” என்று மற்றொரு நண்பர் இழுக்க, அதுவொரு சுவையான விவாதமாகவே மாறியது.

“உண்மையாகவே தங்களுடைய படைப்புத்திறனால், அல்லது மாறுபட்ட கோணங்களால் வாசகர்களை ஈர்க்கிறவர்கள் இருக்கிறார்கள். சில பேர் ரசிகர் மன்றம் போல ஏற்படுத்திக்கொள்கிறார்கள். அங்கே இங்கே தங்களைப் பற்றி ஏதாவது பேசவும் எழுதவும் ஏற்பாடு செய்கிறார்கள்…” என்றார் இன்னொருவர். வேறொரு சிறிய இலக்கியப் பகிர்வுக் கூட்டத்தில் பேசிய அன்பரொருவர், “பூமியையே புரட்டிப்போடுகிற நெம்புகோல்தான் தங்களுடைய எழுத்துகள் என்று தலைநிமிர்ந்து சுற்றி வருகிற எழுத்தாளர்கள் பலர், மக்களின் பிரச்சினைகளுக்காக நடத்தப்படும் தெருமுனைப் போராட்டங்களுக்குக்கூட வருவதில்லை,” என்றார். சிற்றரங்கில் பெரும் அமளியே ஏற்பட்டு அடங்கியது. நிகழ்ச்சி முடிந்து தேநீர்க் கடையில் எல்லோருமாகக் கூடியபோது அந்த அமளி பற்றிப் பேச்சு வந்தது. “போராட்டங்களில் பங்கேற்கிறோம் என்றால் இவர் பேசியதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. பங்கேற்பதில்லை என்றால் எதிர்வினையாற்றும் தகுதி நமக்கில்லை. பிரச்சினைகள் பற்றி எழுதுகிறவர்கள் போராட்டங்களில் பங்கேற்கத் தேவையில்லை என்று கருதினால் அதைத் தயங்காமல் சொல்லவும் தடையில்லை. எதற்காகக் கூச்சல் போட வேண்டும்,” என்றேன். இலக்கியத்தைச் சாக்கிட்டு நடைபெறும் பல கூட்டங்கள், படைப்புகளின் உள்ளடக்கம், சித்தாந்தம், அரசியல், அழகியல் பற்றிய வாத-எதிர்வாதங்களாக இல்லாமல் இவ்வாறு தனிப்பட்ட விமர்சனங்களாகவும் கண்டனங்களாகவுமே முடிகின்றன.

சில நேரங்களில், அந்தக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதே இப்படித் தாக்குவதற்காகத்தானோ என்ற எண்ணம் கூட ஏற்படுகிறது. கொள்கை ஒருமைப்பாட்டுடன் இயங்குகிறவர்களிடையேயும் சிலர், ஏதோவொரு தகுதி மட்டத்தை வரைந்து வைத்துக்கொண்டு, அதற்குள் வராதவர்களை ஆட்டத்தில் சேர்த்துகொள்வதில்லை. மிகப் பரவலாகச் சென்றடைகிற படைப்புகள் கூட மொத்த மக்கள்தொகையோடு ஒப்பிடுகையில் மிகக்குறுகிய வட்டத்திற்கு உள்ளேதான் அடங்குகின்றன. அதற்குள்ளேயே இவ்வளவு அக்கப்போர்களா! இப்படியான அக்கப்போர்களுக்குள் அகப்படாதவர், சமூகப் பணிகளன்றி தன்னை முன்னிலைப்படுத்துவதற்கென குழு சேர்க்காதவர், போராட்டங்களில் பங்கேற்பதில்லை என்ற விமர்சனத்திற்குப் பொருத்தமற்றவர், அரசியல், சமூகம், பண்பாடு, இலக்கியம் என காலூன்றிய தளங்களிலெல்லாம்  ஆக்கப்போர்களை நடத்திக்கொண்டிருப்பவர் பாலபாரதி. கவிஞர் பாலபாரதி என்று மட்டும் சொல்லி இவரை அறிமுகப்படுத்திவிட முடியாது. மார்க்சிய இயக்கப் பாதையில் ஒரு பயணி, பெண்ணுரிமைப் போராளி, தொழிற்சங்கக் களமாடி, மக்களின் போராட்ட வழிகாட்டி, நயமிகு சொற்பொழிவாளி, கூர்மிகு ஊடக வாதாடி என்றெல்லாம் சேர்த்துச் சொன்னால்தான் மூன்று முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பங்களித்திருப்பவரின் அடையாளம் முழுமையுறும். தொடக்கத்தில் இவர் திண்டுக்கல் நகரிலிருந்து

‘வண்ணக்கதிர்’ பகுதிக்குக் கவிதைகள் அனுப்பிய நாகலட்சுமியாகத்தான் அறிமுகமானார். பின்னர் படிப்படியாக ஒரு களப்போராளியாக, சமூக அக்கறையாளராக, இயக்கத் தொண்டராக ஒவ்வொரு தளத்திலும் இவரது முழக்கங்களைச் செய்தியாக எழுதியது எனக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பு. அப்படிப்பட்ட அருமையான, அழகான வாய்ப்புகளில் ஒன்றுதான் ‘நம் பதிப்பகம்’ வழியாக ‘பால பாரதி கவிதைகள்’ தொகுப்பை வாசித்தது. அரசியல் கூர்மையுடன் கருத்துச்சுவை, உறுதியிலிருந்து புறப்படும் நகைச்சுவை, மக்களை நேசிக்கும் அக்கறைச்சுவை, அழகியலோடு உறவாடும் சொற்சுவை, அத்தனை வெளிப்பாட்டிலும் உறைந்திருக்கும் நேர்மைச்சுவை, மாற்றத்திற்காக உழைக்கும் வியர்வைச்சுவை என்ற அறுசுவை விருந்தாக அனைத்துக் கவிதைகளும் புத்தக இலையில் பரிமாறப்பட்டிருக்கின்றன. அவற்றைச் சுவைப்பது இனிமையான அனுபவம் என்றால், மாதிரிக்காகச் சில கவிதைகளைக் காட்டுவதென்பது கடுமையான அனுபவம். ஒரு நல்ல கவிதைக்கு அடிப்படையாவது எது? கருப்பொருளா, வடிவமா, தொடக்கமா, முடிப்பா, உருவகமா, உவமையணியா என்று பாகுபடுத்திக்காட்ட முடியாத படைப்பாக அது இருப்பதுவேயாகும். அதே போல, ஒரு நல்ல கவிதைத் தொகுப்புக்கு அடிப்படையாவது, முதல் கவிதையா, இடையில் வருவதா, இறுதியாக இடம்பெற்றிருப்பதா என்று பிரித்துக்காட்ட முடியாத ஆக்கங்களைக் கொண்டிருப்பதுதான். இந்தத் தொகுப்பு அத்தகையது. ஆண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குகிற காலம் வந்தால் எப்படி இருக்கும் என்ற எதிர்காலக் கற்பனையின் மூலம்,

பெண்களின் நிகழ்கால உண்மை நிலையை உணர்த்துகிற கவிதையைச் சொல்லலாம்தான். அப்படிச் சொன்னால், சுயமரியாதைப் போராளியின் படைப்புகளல்லவா, மற்ற கவிதைகள் நாங்களென்ன அடுத்த படியிலா நிற்கிறோம் என்று சண்டைக்கு வரும். பெண்ணைக் காப்பாற்றாத பெண் கடவுளையும் காப்பாற்ற வாளை உருவுகிறது ஒரு கவிதை. ஒற்றைப் பறவையின் துடிப்பை நிதானமாக அறுவடை செய்யும் அற்பத்தனத்தில் காறி உமிழ்கிறது மற்றொரு கவிதை, மூன்றாம் வகுப்புக்குச் செல்வதற்கான தேர்ச்சி அட்டை கிடைத்த குழந்தைகக்குச் சிறகு முளைக்கும் ரகசியத்தைப் புரிந்துகொள்ள நம்மை இரண்டாம் வகுப்புக்குப் போகச்சொல்கிறது ஒரு கவிதை. எவ்வளவு தேர்ச்சி பெற்றும் ஒரே வகுப்பில் நிறுத்திவைக்கிற பாடமுறையை முட்டிக்கால் போட வைக்கிறது இன்னொரு கவிதை. மண்ணைக் கவ்வச் செய்வதாகவும் வேரோடு வீழ்த்துவதாகவும் சவால் விடுத்து மனிதகுலத்தின் உயிர்களான மண்ணையும் வேரையும் தாழ்த்தலாமா என்ற உறுத்தலை ஏற்படுத்துகிறது வேறொரு கவிதை. 

“எல்லா சாதனைகளையும்
கூறிவிட்டீர்களா
ஏழ்மையில் வாழ்வதே
இவர்களின் சாதனை

என்பதையும் இணைத்துக்கொள்ளுங்கள்” -இப்படி எந்தவொரு கவிதையை மாதிரிக்கு எடுத்துக்காட்டினாலும் மற்ற கவிதைகள் கோபித்துக்கொள்ளும். அத்தனை கவிதைகளிலும் கவிஞரோடு இணைந்து நிற்கிற அனுபவம் வாய்க்கிறது. குழந்தைகளின் உலகத்தைப் பாடுகிற கவிதைகளைப் பற்றியே தனியாகப் பேசுகிற நிகழ்ச்சிகளை நடத்தலாம் – அவ்வளவு செறிவானவை. 

“பரீட்சையில்
பாஸ் பண்ணுவது
முக்கியமல்ல – அதிகமா
மார்க் வாங்குவதுதான்
முக்கியம் என்றேன்
விடுமுறை முக்கியமில்லையா
என்றாள் குழந்தை”.

-ஒவ்வொன்றிலும் கவிஞரின் குழந்தை நேசம், குழந்தையின் கன்னத்திலிட்ட முத்தத்தின் ஈரம். ஏழைக் குடிசைக் கூரையின் வழியாக நிலா தெரிகிறது என்பதற்காக குடிசையிலேயே இருக்கவிடுவதை ரசிக்க முடியுமா, பெட்ரோலும் மொபைலும் இன்ன பிறவும் முதலாளிகளின் விற்பனைப் பொருள்களாக இருக்கின்றன என்பதற்காக அவை முதலாளித்துவச் சரக்குகளாகிவிடுமா என்றெல்லாம் கவிஞருக்கு எதிராகத் திரும்பிக் கேட்கவைக்கிற கவிதைகளும் ஒன்றிரண்டு இருக்கின்றன. வாழ்க்கைக் காட்சிகள் கவிதையாக மாறியிருக்கின்றன. அது வாசித்தலின் ரசனையைத் தருவதோடு, வாழ்க்கைக் காட்சிகளை கவிதையாகப் பார்ப்பதில் படைத்தலின் சுகத்தையும் நாட வைக்கிறது. உழைப்புப் பூக்களின்  வண்ணமும் வாசமும் மிக்க மாலையென ‘பாலபாரதி கவிதைகள்’ கோர்க்கப்பட்டிருக்கிறது. 

பால பாரதி கவிதைகள்
வெளியீடு: நம் பதிப்பகம்
26/2 காவேரி தெரு,
சாலிகிராமம், சென்னை – 600 093
பக்கங்கள்: 144  விலை: ரூ.170
தொடர்புக்கு: 9566110745
nampublication2021@gmail.com