வெளிநாட்டு தொழில்கள் வரட்டும் ; ஒப்பந்த தொழிலாளர்களாக வைத்து வேலை வாங்குவதை ஏற்கமாட்டோம்
ஆலங்குளம் சிஐடியு அலுவலக திறப்பு விழாவில் அ.சவுந்தரராசன் பேச்சு
வெம்பக்கோட்டை, ஜூன் 9 - விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த ஆலங்குளத்தில் சிமிண்ட் ஆலை சிஐடியு தொழிற்சங்கத்தின் புதுப்பிக்கப் பட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. ஆலங்குளம் முக்குரோட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சிஐடியு கன்வீனர் எஸ்.பெரிய சக்கரை தலைமை வகித்தார். சிஐடியு நிர்வாகி கள் எம்.கிருஷ்ணசாமி மற்றும் எஸ். முத்து ஆகி யோர் முன்னிலை வகித்தனர். எஸ். இராம கிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் புதுப்பிக்கப் பட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,ஒன்றிய பாஜக அரசும் தமிழக அரசும் பொதுத்துறை நிறுவனங் களை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என வலி யுறுத்தினார். “பிரதமர் மோடி பல வெளிநாடுகளுக்குச் சென்று தொழில்களை இந்தியாவிற்கு கொண்டு வந்ததாக கூறுகிறார். வெளிநாட்டு தொழில்கள் இங்கு வரட்டும். ஆனால், தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களாக வைத்து வேலை வாங்குவதை சிஐடியு ஏற்காது. அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்ட அவர், பொதுத்துறை நிறுவனமான ரயில்வே யில் ஏராளமான காலியிடங்கள் உள்ளன என்றும், தொழிலாளர்கள் குறைவாக இருக்கும் நிலையில் இரயில் சேவையை மட்டும் அதிகரித்து வருவதாகவும் விமர்சித்தார். ஆலங்குளம் சிமிண்ட் ஆலை “தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆலங்குளம் சிமிண்ட் ஆலையை விரிவுபடுத்தி செயல்படுத்த வேண்டும். முன்னாள் முதல மைச்சர் கலைஞர் உருவாக்கிய இச்சிமிண்ட் ஆலையை தொடர்ந்து இயக்கிட தமிழக முதல் வர் முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தினார். கேரள மாதிரி கேரள மாநிலத்தில் உள்ள இடதுசாரி அரசு தேர்தல் வாக்குறுதியின்படி நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களை புனரமைக்க நிதி ஒதுக்கி சிறப்பாக செயல்படுத்தி வருவதை எடுத்துக்காட்டினார். “அந்நிறுவனங்களின் லாபத்தை வைத்து புதிய தொழிற்சாலைகளையும் உருவாக்கி வருகின்றனர்” என்றார். தொழிலாளர் சட்டங்கள் “தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்துக் கட்ட பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இது நடை முறைக்கு வந்தால் தொழிற்சங்கங்கள் நடத்த முடியாது” என்று எச்சரித்தார். 1926இல் பிரம்மாண்டமான வேலை நிறுத்தங்கள் மற்றும் தியாகங்களின் மூலம் கொண்டு வரப்பட்ட தொழிற்சங்க சட்டத்தை சுதந்திர இந்தியாவில் ஒழிக்க முயற்சிப்பதை கடுமையாக விமர்சித்தார். பொருளாதார நிலை இந்தியாவில் தனிநபர் வருமானம் மற்றும் மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளதாகவும், முதலாளிகள் பெரும் லாபம் ஈட்டும் நிலையில் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்கப்படுவதில்லை என்றும் கூறினார். அரசியல் விமர்சனம் பஹல்காம் தாக்குதல் குறித்து நாடாளு மன்றத்தில் விளக்கம் அளிக்க மறுப்பதாக பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டினார். “இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோதும் லண்டன் நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது” என்று ஒப்பிட்டுக் கூறினார். எடப்பாடி பழனிசாமியின் பாஜக கூட்டணி குறித்தும் கேள்வி எழுப்பினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜூனன் விளக்கவுரை நிகழ்த்தினார். படங்கள் திறப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பல்வேறு தலை வர்களின் படங்கள் திறந்து வைக்கப்பட்டன: -ஏ. நல்லசிவன் படம் : சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என். தேவா திறந்து வைத்தார் - ஜே. லாசர் படம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் ஆ. குருசாமி திறந்து வைத்தார் - கே. வைத்தியநாதன் படம் : சிஐடியு மாவட்டத் தலைவர் எம். மகாலட்சுமி திறந்து வைத்தார் - பி. ராமமூர்த்தி படம் : சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா. சுந்தரபாண்டியன் திறந்து வைத்தார் - ஜே. ஹேமச்சந்திரன் படம்: மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. மாரியப்பன் திறந்து வைத்தார் - ஆர். பொன்னுச்சாமி படம்: மாவட்ட நிர்வாகி ஆர். சோமசுந்தரம் திறந்து வைத்தார் - எம். மீனாட்சிசுந்தரம் படம் : சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே. கண்ணன் திறந்து வைத்தார் எம். சௌந்தர்ராஜன் நன்றியுரை நிகழ்த்தி நிறைவு செய்தார். ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.