tamilnadu

img

மாஸ்கோவில் மாபெரும் வெற்றிப் பேரணி!

மாஸ்கோவில் மாபெரும்  வெற்றிப் பேரணி!

பாசிசத்தை வீழ்த்தியதன் 80-ஆவது ஆண்டு

29 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

மாஸ்கோ, மே 9 - இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் தலைமையிலான நாஜி படையை ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் செம்படை வீழ்த்திய 80-ஆவது ஆண்டு நிறைவு விழா- வெற்றிப் பேரணி, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மே 9 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சீனா, புர்கினோ பாசோ, பிரேசில், வெனிசுலா போன்ற ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடுகளின் ஜனாதிபதிகள் உள்ளிட்ட 29 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக தென் அமெரிக்கா உள்ளிட்ட தெற்குலக நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.  அர்மீனியா, இஸ்ரேல், மங்கோலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் கவுரவ விருந்தினர்களாக பங்கேற்றனர்.

நாஜிசத்திற்கு எதிராக எப்போது நிற்போம் : ரஷ்ய ஜனாதிபதி புடின் உறுதி

இந்த வெற்றி தினப் பேரணியில் பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடின், “எப்போதுமே நாஜிசம், ரஷ்ய வெறுப்பு மற்றும் யூத எதிர்ப்புக்கு எதிராக- ஊடுருவவே முடியாத தடுப்பு அரணாக, இனிமேலும் ரஷ்யா நிற்கும்” என்று உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “அழிவு சிந்தனைகளை ஊக்குவிப்பவர்களின் கொடுமைகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். நாஜிசத்தை கோடிக்கணக்கான உயிர்களைத் தியாகம் செய்து வீழ்த்திய கடந்த தலைமுறை பற்றிய பெருமை, மகிழ்ச்சி, துக்கம், நன்றி, பாராட்டு ஆகிய உணர்வுகளால் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். அவர்களே முழு மனிதகுலத்திற்கான சுதந்திரத்தையும் சமாதானத்தையும் வென்று கொடுத்தனர்.   அந்த வெற்றிகளின் நினைவை நாங்கள் நம்பிக்கையுடன் பாதுகாக்கிறோம். இரண்டாம் உலகப் போரில் கற்றுக்கொண்ட பாடங்களை ரஷ்யா நினைவில் வைத்துள்ளது. அந்த நாட்களில் நடந்த கொடுமைகள் மீண்டும் அரங்கேறிவிடாத வகையில் அதனை ரஷ்யா தடுக்கும்” என்றும் புடின் கூறினார். ரஷ்ய படைகள் மட்டுமின்றி சீனா, பெலாரஸ், எகிப்து, வியட்நாம் மற்றும் கஜகஸ்தான் உள்ளிட்ட 13 நாடுகளின் படைப்பிரிவுகளும் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டன.