மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒன்றில் அறுவை சிகிச்சைக்கு பிறகு 41 பெண்களை, சுகாதாரக் கேடு ஏற்படும் வகையில் தரையில் கிடத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் விதிஷாவில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கியராஸ்பூரின் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கிட்டத்தட்ட 41 பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சைக்காக வந்துள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு இவர்கள் ஓய்வெடுக்க தகுந்த கட்டில்கள் வழங்கப்படாமல், அவர்கள் அனைவரையும் அங்குள்ள வராந்தாவில் வரிசையாக தரையில் படுக்க வைத்துள்ளனர்.
இது ஊடக வெளிச்சத்திற்குப் பிறகு பெரிய பிரச்சினையாக உருவெடுத்ததை அடுத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பி.சி. சர்மா ஊடகங்களிடம் பேசினார். இந்தச் சம்பவத்தில் விசாரணை நடந்து வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், விடிஷா தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி சி.எம்.எச்.ஓ டாக்டர் அஹிர்வார் கூறுகையில், ''எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க முழுமையான விசாரணை நடத்தப்படும்'' என்றார்.