தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் கு. மு. அண்ணல் தங்கோ 12 ஏப்ரல் 1904ல் பிறந்தார்.
தனித்தமிழ் அறிஞரான இவர் 1918ல் காங்கிரசில் சேர்ந்தார். 1923ல் கள்ளுக்கடை மறியல், 1925ல் வைக்கம் போராட்டம், 1927ல் சைமன் குழு எதிர்ப்பு போராட்டம், 1930ல் உப்புசத்தியாகிரகப் போராட்டம், நீல் சிலை சத்தியாகிரகம் ஆகியவற்றில் பங்கேற்று 5 முறை சிறை சென்றார். 1936ல் காங்கிரசில் இருந்து விலகி நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் இணைந்தார். 1944ஆம் ஆண்டில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமும் சுயமரியாதை இயக்கமும் இணைக்கப்பட்டு, திராவிடர் கழகம் உருவானபோது அதற்குத் ‘தமிழர் கழகம்’ என பெயர் சூட்டுமாறு வலியுறுத்தினார். வேலூரில் 1937ல் உலகத் தமிழ் மக்கள் தற்காப்பு பேரவையைத் தொடங்கினார். ஆண்டுதோறும் பொங்கல் விழாவை வேலூரில் கொண்டாடினார்.
அதில் பல தமிழறிஞர்களையும் சான்றோர்களையும் கலந்துகொள்ள வைத்து தமிழ் உணர்வை வளர்த்தார். 1937 மற்றும் 1938ல் தமிழர் உரிமை மாநாடுகளை நடத்தினார். 1927ல் ‘திருக்குறள்’ நெறி தமிழ்த் திருமணத்தை அறிமுகப்படுத்தி குடியாத்தம் சிவமணி அம்மையாரை மணந்தார். 1942ல் ‘தமிழ் நிலம்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.நடிகர் சிவாஜிகணேசனைத் திரை உலகுக்கு அறிமுகப்படுத்திய ‘பராசக்தி’ படத்திலும், ‘பெற்றமனம்’, பசியின் கொடுமை’, கோமதியின் காதலன்’ ஆகிய திரைப்படங்களிலும் பாடல் எழுதி இருக்கிறார். தமிழ் மொழியின் சிறப்பை வளர்க்கும் வகையில் பல நூல்களை எழுதியுள்ளார். வாழ்நாள் முழுவதும் திருக்குறள் நெறியைப் பரப்பவும் தனித்தமிழை வளர்க்கவும் பாடுபட்ட கு.மு.அண்ணல்தங்கோ சனவரி 4, 1974ல் தேதி இறந்தார். அண்ணல்தங்கோவை கவுரவிக்கும் வகையில் அவருடைய படைப்புக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.