tamilnadu

img

பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தையை கொன்ற கொடூர தந்தை கைது!

சென்னை வியாசர்பாடியில் பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தையை, தந்தையே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் ராஜ்குமார் (38) - விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு ஐந்து மற்றும் இரண்டரை வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த மாத மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த 7ஆம் தேதி காலையில் விஜயலட்சுமி குளிக்கச் சென்றுள்ளார். பின்னர் வந்து பார்க்கும்போது பிறந்து ஒன்பது நாட்களேயான குழந்தையின் வயிற்றில் கத்திக் குத்து காயங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 9ஆம் தேதி குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அதிகாரி ப்ரதிஷ்டா என்பவர் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வியாசர்பாடி காவல்துறையினர்  தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், குழந்தையின் தந்தை ராஜ்குமார் கத்திரியால் குழந்தையைக் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து வியாசர்பாடி காவல்துறையினர்  ராஜ்குமாரைக் கைது செய்தனர்