தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று பதவியேற்றார்.
மேற்கு வங்க ஆளுநராக இருந்த சி.வி.அனந்த போஸ் கடந்த மார்ச் 5-ஆம் தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து, தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை மேற்கு வங்கத்திற்கு அளுநராகவும், கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டிற்கான பொறுப்பு ஆளுநராகவும் நியமனம் செய்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார்.
அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று பதவியேற்றார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் எம்.அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர் பாபு மற்றும் எஸ்.ரகுபதி, ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
