தமிழ்நாட்டில் 3 சக்கர ஆட்டோ ரிக்க்ஷா மற்றும் இருசக்கர வாகனங்களை சரக்கு வாகனங்களாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போக்கு ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்:
பயணிகள் போக்குவரத்திற்காக பதிவு செய்யப்பட்ட இந்த வாகனங்களை, சரக்கு எடுத்துச் செல்ல பயன்படுத்துவது மோட்டார் வாகனச் சட்ட விதிமுறைகளுக்கு முரணானது எனவும், குறிப்பாக, ஆன்லைன் செயலிகள் மூலம் சரக்கு விநியோக சேவைகளில் ஈடுபடும் வாகனங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சோதனையின் போது கண்டறியப்பட்டால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வமான போக்குவரத்து நடைமுறைகளை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
