tamilnadu

img

காந்தராஜ், பயில்வான் ரங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்க மாதர் சங்கம் வலியுறுத்தல்!

பெண் திரைப்பட கலைஞர்கள் மீது ஆபாசமான அவதூறுகளை பரப்பும் மருத்துவர் காந்தராஜ் மற்றும் பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இப்பிரச்சனையில் தமிழ்நாடு மகளிர் ஆணையம் தலையீடு செய்ய வேண்டும் எனவும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழுத் தலைவர் எஸ்.வாலண்டினா மற்றும் பொதுச் செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியதாவது: 
"சமீப காலமாக சமூக வலைதளங்களில் பெண் திரைப்பட கலைஞர்கள் மீது காந்தராஜ் என்பவரும், பயில்வான் ரங்கநாதன் என்பவரும் தொடர்ச்சியாக யூடியூப் சேனல்களில் அருவருக்கதக்க, ஆபாசமாக மற்றும் பாலியல் ரீதியான அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.
பெண் திரைப்பட கலைஞர்கள் வாய்ப்புக்காக பாலியல் சமரசங்களை செய்து கொள்கிறார்கள் என்றும், பாலியல் சமரசம் செய்தே ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றும், பெண் திரைப்பட கலைஞர்களை கண்ணிய குறைவாகவும், மரியாதை குறைவாகவும், திரைப்படத் துறையில் பணியாற்றும் பெண்களுடைய உழைப்பை கொச்சைப்படுத்தி அவதூறு பரப்பி வருகின்றனர்.
அனைத்து துறைகளிலும் பெண்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து முன்னேறி வருகின்றனர். அதுபோலவே திரைப்படத் துறையிலும் பணி சூழல் காரணமான கடும் இன்னல்களை தாண்டி எந்தவித நேர கட்டுப்பாடும் இல்லாமல் உழைத்து வருகின்றனர். திரைப்படத்தில் நடிப்பது என்பது ஒரு தொழில் என கருதாமல் ஆடம்பரமான வாழ்க்கைகாக என பெண் கலைஞர்களை மட்டுமே குறிவைத்து ஆணாதிக்க சிந்தனையின் உச்ச பட்ச கருத்துகளை சமூகத்தின் பொது புத்தியில் திணிக்க கூடிய இத்தகைய செயலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. 
மேலும் இத்தகைய அவதூறு பிரச்சாரங்களை தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். 
பெண் திரைப்பட கலைஞர்களின் பாதுகாப்பிற்காக தென்னிந்திய நடிகர் சங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உறுதுணையாக நிற்கும். 
தென்னிந்திய நடிகர் சங்கம் உள் புகார் கமிட்டி குறித்து திரைப்பட கலைஞர்களுக்கு விழிப்புணர்வு முகாம்களை நடத்திட வேண்டும்.
தமிழ்நாடு மகளிர் ஆணையமும் மேற்கண்ட சம்பவத்தில் தலையீடு செய்து விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.