tamilnadu

img

மதுரைக்கேட்டத்திற்கு உட்பட்ட பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க சு. வெங்கேடசன் எம்.பி வலியுறுத்தல்

கொரோனா தொற்று நோய் பரவலால் மத்திய அரசு ஊரடங்கு அமல்படுத்தியதன் காரணமாக இரயில்வே நிர்வாகம் மார்ச் மாதம் 24.03.2020 முதல் அனைத்து பயணிகள் இரயில் இயக்கத்தையும் ரத்து செய்தது. தற்போது தொற்று நோய் பரவல் படிப்படியாக குறைந்துள்ளதால் மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தியுள்ளது. மேலும் தமிழக அரசு அனுமதி வழங்கியும் இரயில்வே நிர்வாகம் இன்னும் பயணிகள் இரயில்களை முழுமையாக இயக்க முன்வரவில்லை. இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக இயக்கப்படாமல் இருக்கும் மதுரைக்கோட்டத்திற்க்கு உட்பட்ட பயணிகள் இரயில் வண்டிகளை மீண்டும் இயக்க வேண்டுமென மதுரைக்கோட்ட இரயில்வே மேலாளர் வி.ஆர்.லெனினை சந்தித்து சு.வெங்கடேசன் எம்பி வலியுறுத்தினார். 

கோரிக்கைகள் பின்வருமாறு:-

1. மதுரைக்கோட்டத்தை பொறுத்தவரை மதுரையிலிருந்து இராமேஸ்வரத்திற்கு எவ்வித பயணிகள் வண்டிகளும் இயக்கவில்லை. கொரோனாவிற்கு முன்பு காலை 6.50, மதியம் 12.40, மாலை 6.10 என மூன்று சாதாரண கட்டண பயணிகள் வண்டிகளும், திங்கள் வியாழன், சனிக்கிழமைகளில் கன்னியாகுமரியில் இருந்து இராமேஸ்வரம் வரை செல்லும் விரைவு கட்டண ரயில்கள் இயக்கப்பட்டன.மறு மார்க்கத்தில் இராமெஸ்வரத்தில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு மேற்கூறிய மூன்று நாட்கள் இயக்கப்பட்டன. ஆனால் தற்போது எந்த பயணிகள் இரயில்களும் இயக்கப்படவில்லை. இது ரயில் பயணிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே மதுரை இராமேஸ்வரம் மார்க்கத்தில் மீண்டும் ரயில்கள் இயக்கப்படவேண்டும்.

2. அதே போல மதுரையிலிருந்து விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், கடைய நல்லூர், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு காலை 7.15, பகல் 11.15, மாலை 5.15 என தினமும் மூன்று சாதாரண கட்டண ரயில்களும் பொதிகை விரைவு கட்டண பயணிகள் இரயில் வண்டியும் முன்பு இயக்கப்பட்டன. இப்போது பொதிகை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் மதுரை-செங்கோட்டை ரயிலில் பயணித்த பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சாதாரண கட்டண ரயில்கள் மீண்டும் இயக்கப்படவேண்டும்.

3. அதேப்போல மதுரை – திண்டுக்கல் – ஒட்டன்சத்திரம் – பழனி –உடுமலைப்பேட்டை - பொள்ளாச்சி வழியாக கோயமுத்தூருக்கு காலை 7.30 மணிக்கு சாதாரண கட்டண பயணிகள் ரயில் வண்டி இயக்கப்பட்டது. இவ்வழித்தட பயணிகள் ரயில் வண்டியும் தொடார்ந்து இயக்கப்பட வேண்டும்.

4. சமீபத்தில் 200கி.மீட்டருக்கு அதிகமாக விரைவு கட்டண பயணிகள் இயக்கப்படும் என்ற இரயில்வே வாரிய உத்தரவால் சாதாரண கட்டணம் அனைத்தும் விரவு கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே மீண்டும் சாதாரண கட்டணம் கொண்டுவரப்படவேண்டும்.

5. மதுரை நகர் பகுதியில் உள்ளவர்கள் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் சென்று பேருந்தில் பயணம் செய்யவேண்டியுள்ளது. மதுரையிலுள்ள தொழில் நிறுவனங்கள் பெரிய,சிறிய நிறுவனங்களில் பணிபுரிந்து முன்பு இரயிலில் பயணித்து வந்த தொழிலாளர்கள் சிறு வியாபாரிகள், மாணவர்கள் சீசன் டிக்கெட் எடுத்து பயணம் செய்தனர். தற்போது பயணிகள் வண்டிகள் இயக்கப்படாததால் அனைவரும் அதிக கட்டணம் உள்ள பேருந்தில் பயணம் செய்து தங்களது ஊதியத்தில் கால்பங்கை பயணத்திற்கு செலவு செய்யும் அவல நிலை உள்ளது. எனவே அனைத்து இரயில் மார்க்கங்களிலும் சாதாரண பயணிகள் கட்டண இரயில் வண்டிகள் மீண்டும் இயக்கப்படவேண்டும்.

6. கொரோனாவிற்கு முன்பு மதுரை-புனலூர் வழித்தடத்தில் இயங்கும் வண்டி எண்: 56700/56701 சாதாரண கட்டண இரயில் வண்டியை (409கி.மீ வண்டி எண்:06729/06730) விரைவு கட்டண இரயில் வண்டியாக மாற்றப்பட்டுள்ளது. அதேசமயம் சாத்தூர், கோவில்பட்டி போன்ற முக்கிய நிறுத்தங்கள் எடுக்கப்பட்டுவிட்டது. இதனால் சாத்தூர், கோவில்பட்டியில் இருந்து கேரள மாநிலத்திற்கு பயணம் செய்த தொழிலாளர்கள், வியாபாரிகள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மீண்டும் சாத்தூர், கோவில்பட்டியில் நிறுத்தம் வேண்டும். மேலும் சாதாரண கட்டணமாக மாற்றப்படவேண்டும்.

7. மேலும் தற்போது இயக்கப்படும் விரைவு கட்டண இரயில்களில் குறிப்பாக விழாக்கால சிறப்பு இரயில்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக முன்பு தூத்துக்குடி-மைசூர் விரைவு கட்டண இரயில் வண்டி எண்:16235/16236 என்ற இரயில் வண்டியை வண்டி எண்: 06235/06236 என விழாக்கால இரயில் வண்டியாக பெயர் மாற்றி தட்கல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. பொதுப்பெட்டிகள்(General Coach) இல்லை என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்தும் முன்பதிவு செய்துதான் பயணம் செய்யவேண்டும் என்ற கட்டாயம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை மாற்றவேண்டும்

8. கொரோனாவிற்கு முன்பு மகளிர் மட்டும் பயணிக்க கார்டு பெட்டிக்கு அருகில் உள்ள பயணிகள் பெட்டி பயன்படுத்தப்பட்டது. இப்போது மகளிர் மட்டும் பயணம் செய்யும் பெட்டிகள் பொதுபெட்டியாக மாற்றப்பட்டுள்ளது. இதனை மாற்றி ஏற்கனவே இருந்தவாறு மகளிர் மட்டும் பயணம் செய்யும் பெட்டியாக இயக்கப்படவேண்டும்.

9. கொரோனாவிற்கு முன்பு மூத்த குடிமக்களுக்கு( Senior Citizens ) வழங்கப்பட்ட இரயில் பயண சலுகை கட்டணம் தற்போது ரத்துசெய்யப்பட்டுள்ளது. மீண்டும் மூத்த குடிமக்களுக்கு முன்பு போல சலுகை வழங்கப்படவேண்டும்.

மேலே கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் விரைவில் செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

;