tamilnadu

img

பாதி இந்தியா பட்டினி கிடக்கையில் புதிய நாடாளுமன்ற கட்டடம் யாரைக் காக்க? பிரதமருக்கு கமல்ஹாசன் கேள்வி...

மதுரை:
பாதி இந்தியா பட்டினி கிடக்கையில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவது யாரைக் காக்க என கமல்ஹாசன் பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.சட்டமன்றத் தேர்தல் பரப்புரையை தொடங்குவதற்காக ஞாயிறன்று மதுரை வந்த அவர் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் தொடங்கிய கட்சி ‘மக்கள் நீதி மய்யம்’. பிரச்சாரத்தை இங்கிருந்து தொடங்குவதுதான் சரியாக இருக்கும் என்பதால் மதுரையில் தொடங்குகிறோம். கடைசி நிமிடத்தில் சில இடங்களில் அனுமதிகள் மறுக்கப்பட்டாலும், பொங்கி வரும் புது வெள்ளத்துக்கு முன்னால் சிறு மடைகள் தடை ஆகாது.நாங்கள் சட்டத்துக்கு உட்பட்டு எப்படியெல்லாம் பிரச்சாரத்துக்குத் திட்டமிட்டு இருந்தோமோ, அதன்படியே எங்கள் பிரச்சாரம் இருக்கும். சில இடங்களில் மட்டுமே தடைக`ள் விதிக்கப்பட்டுள்ளன. எங்களுக்குத் தடைகள் புதிதல்ல. சட்டத்துக்கு உட்பட்டு, விதிகளுக்கு உட்பட்டுதான் செயல்படுவதாக இருக்கிறோம். அதை மீறும் எண்ணம் எங்களுக்கு இல்லை. யாருக்கெல்லாம் எங்களது கருத்து குத்தலாக இருக்கிறதோ அவர்கள் தடை செய்வார்கள்”.

அரசியலுக்கு வருவதற்கு முன்பே தடை வைப்பார்கள். எங்களுக்கு அதெல்லாம் பழக்கம். அனுபவம் இருக்கிறது. ஒத்திகையும் பார்த்துவிட்டோம் என்பதனால் எங்களுக்குப் பதற்றமில்லை. மக்களைச் சென்றடைய முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.“மக்கள் நீதி மய்யமும், ஆன்மிக அரசியலும் ஒன்றாகக் களமிறங்க வாய்ப்பு உள்ளதா?” என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன் “முன்பே சொல்லியிருக்கிறேன். அணிகள் பிளவுபடும், அணிகள் கூடும். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்” என்றார்.

மூன்றாவது அணி குறித்து எழுப்பப்பட்டகேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், “எதுவும் நடக்கலாம், தற்போது கூற இயலாது” என்றார்.மதுரையில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ள அவர் தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதற்கட்ட சுற்றுப்பயணம் டிசம்பர் 16-ஆம் தேதி நிறைவடைகிறது.

மேலும் தமது டுவிட்டர் பதிவில், “பொங்கும் புது வெள்ளத்திற்குச் சிறுமடைகள் தடை ஆகாது.  பாதை  பழசு.  பயணம் புதிது. வெற்றி நமதே” எனக் குறிப்பிட்டுள்ளார். சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக் காக்க? பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே என கேள்வியெழுப்பியுள்ளார்.

;