சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் மான் முட்டியதில் வனக்காப்பாளர் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் குரும்பப்பட்டியில் வன உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் வனவிலங்கு காப்பாளராக பணியாற்றி வருபவர் தமிழ்செல்வன். இவர் வழக்கம் போல இன்று மான்களுக்கு உணவு வழங்கியுள்ளார். அப்போது திடீரென கடமான் முட்டியதில் தமிழ்ச்செல்வன் படுகாயம் அடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பணியாளர் முருகேசன் என்பவர் தமிழ்செல்வனைக் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது மான் முருகேசனையும் முட்டியது.
இதையடுத்து அங்கிருந்த சக பணியாளர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே தமிழ்ச்செல்வன் உயிரிழந்தார். முருகேசனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கன்னங்குறித்து காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணியின்போது வன அலுவலர் மான் முட்டி உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.