tamilnadu

img

தமிழ்நாட்டில் தொடரும் சாதி ஆணவப் படுகொலை

சென்னை, ஜூன் 27 - விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளத்தைச் சேர்ந்த இளைஞர் அழகேந்திரன்  சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.  இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பட்டியலினத்திற்கு உள்ளேயே இருவேறு பிரிவினர்

விருதுநகர் மாவட்டம், கோவிலாங்குளத்தைச் சேர்ந்த பட்டியலினத்தில் இருவேறு பிரிவுகளை சார்ந்த ருத்ரப்பிரியா என்பவரும், அழகேந்திரன் என்பவரும்  காதலித்து வந்துள்ளனர். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனர். பெண்ணின் உறவினரான பிரபாகரன், திருப்பரங்குன்றத்தில் அவர்களை தேடிப்பிடித்து கட்டாயப்படுத்தி பிரித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார். மேலும், அழகேந்திரனை தாக்கியுள்ளார். 

கொடூர சித்ரவதைக்கு உள்ளாக்கிப் படுகொலை

அத்துடன், இச்சம்பவம் நடந்த அன்று (24.06.2024) இரவே திருமணம் செய்து வைக்க தயாராக இருப்பதாக தொலைபேசியில் அழைத்து பேரையூர் வட்டம், வேலாம்பூர் கண்மாய்க்குள் அழகேந்திரனை படுகொலை செய்துள்ளனர். சாதி ஆணவத்தால் அழகேந்திரன் தலையை துண்டித்து கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர். இதனிடையே அருப்புக்கோட்டை வட்டார காவல்நிலையம் மற்றும் கள்ளிக்குடி காவல் நிலையங்களில் அழகேந்திரனின் தாயார் மாரியம்மாள் கொடுத்த புகாரை ஏற்றுக்கொள்ள காவல்நிலையத்தில் இருந்தவர்கள் மறுத்துள்ளனர்.

அலட்சியமாக செயல்படும் காவல்துறையினர்

தமிழகத்தில் ஆணவக்கொலைகள் நடப்பதற்கு முன்பும், நடந்த பிறகும் கூட பல காவல் நிலையங்களின் அணுகுமுறை அலட்சியமானதாகவும், சாதி சார்ந்ததாகவுமே இருக்கிறது. எனவே, கொலைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்திடவும், பாராமுகமாக இருந்த கடமை தவறிய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

அவசியமாகும் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம்

சாதி ஆணவப்படுகொலைகளை தடுப்பதற்கும், உரிய தண்டனைகள் பெற்றுத் தருவதற்கும் தனிச் சட்டம் வேண்டும் என்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாட்டை, தொடரும் சாதி ஆணவப் படுகொலைகள் வலுப்படுத்தும் நிலையில், தமிழ்நாடு அரசு இத்தகைய சட்டம் குறித்த தனது நிலைபாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.