tamilnadu

img

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே அறையில் 5 வகுப்புகள்: அரசு உதவிப் பெறும் பள்ளியின் அவலம்!

விழுப்புரம், மே 30- விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம், மழவராயனூர் ஊராட்சிக்கு உட்பட்டது நன்னாட்டம் பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் கிருஷ்ணா தொடக்கப்பள்ளி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

பாழடைந்த கட்டிடம்

இந்தப் பள்ளியின்  கட்டிடம் பழுதடைந்துள்ளது. இதுவரைக்கும் புனரமைக்கப்படவில்லை. ஆனால், ஒரே அறையில் ஐந்து வகுப்புகளும், தற்காலிக ஈராசிரியர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

குப்பை கிடங்காக தண்ணீர் தொட்டி

இந்தப் பள்ளியின் வளாகம் அருகே மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் சிறிய அளவிலான தொட்டி ஒன்றும் உள்ளது. ஆனால், போர்வெல் தூர்ந்து போனதால் குப்பை கிடங்காக மாறியுள்ளது.

சாதிய பாகுபாடு!

பள்ளிக்கு அருகாமையில் ஆதிக்க சக்திகள் வசிப்பதால் இங்குள்ள வீடுகளில் தலித் அல்லாத மாணவர்களுக்கு மட்டும் குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்கப்படுகிறது என்றும் தலித் மாணவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், தலித் மாணவர்கள் வீட்டில் இருந்து வரும்போது பாட்டில்களில் தண்ணீர் எடுத்து வர வேண்டிய அவலமும் தொடர்கிறது.

நிலம் ஆக்கிரமிப்பு

பள்ளி வளாகத்திற்கு அரசு கொடுத்த நிலத்தை அந்தப் பகுதியில் உள்ள வசதி படைத்தவர்கள் சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதால் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் கூட அமைத்து கொடுக்க முடியவில்லை.

மேலும் இந்த பள்ளிக்கு அரசு சார்பில் நிதி ஒதுக்கியும் டிஜிட்டல் வகுப்பு நடத்துவதில்லை. டிஜிட்டல் சம்பந்தமான உபகரணங்கள் வாங்கப்படவில்லை. 

ஒதுங்கும் இடமும் இல்லை!

கழிவறை வசதியும் இல்லாததால் தலித் மாணவர்கள் வயல்வெளிகளுக்கு சென்று இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். ஆனால் தலித் மாணவர்கள் அந்த பள்ளியில் தொடர்ந்து படிக்க முடியாமல் இடையில் நின்று விடும் நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. ஆனால் அந்த கிராமம் எதிர்காலத்தில் கல்வியற்ற சமுதாயமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. 

எனவே, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி ஜூன் 10ஆம் தேதி கிளைச் செயலாளர் டி.வைகுண்ட வாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளனர்.