வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது
கடந்த மாதம் நடைபெற்ற அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலை சுருக்குமுறை திருத்தத்தின் மூலம் இறுதி செய்வது குறித்த கால அட்டவணை உறுதி செய்யப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக தமிழகத்தில் நவம்பர் மாதம் முழுவதும் கன மழை, வெள்ள பாதிப்பு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை இணைக்கும் பணியை போன்று இந்த ஆண்டு இந்த பணி முழுமையாக நிறைவேறவில்லை. ஆனால், தேர்தல் ஆணையம் 30.11.2021 உடன் வாக்காளர் சேர்க்கும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைப்பு கோருபவர்கள் 2022 ஜனவரி 5ந் தேதிக்கு பின்னர் தான் அதைச் செய்ய முடியும் என்ற நிலைமை உள்ளது. எனவே, நவம்பர் 30 உடன் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்துள்ள புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணியின் கால அவகாசத்தை டிசம்பர் 15ந் தேதி வரை நீட்டித்து, இளந்தலைமுறையினர் வாக்களிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.