tamilnadu

img

டாக்டர் அம்பேத்கருக்கு சிலை அமைத்திடுக : மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவை, டிச. 6-

கோவை மாநகரத்தின் மையப்பகுதியில் சட்ட மேதை அம்பேத்கர் சிலை அமைக்க வலியுறுத்தி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய முற்போக்கு அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை நீதிமன்ற வளாகம் அருகே அம்பேத்கருக்கு சிலை அமைக்க கடந்த 2007 ஆம் ஆண்டு கோவை மாநகராட்சி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு பல்வேறு அரசுத்துறையிலும் ஒப்புதல் அளித்தனர். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி சிலை அமைக்க காவல் துறையினர் ஆட்சேபணை தெரிவித்ததால் கடந்த 13 ஆண்டுகளாக சிலை அமைக்கப்படவில்லை. இந்நிலையில் மாநகராட்சி தீர்மானப்படி அம்பேத்கர் சிலை அமைக்க வலியுறுத்தி, சிவானந்தா காலனி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் கட்சி, திராவிடத் தமிழர் கட்சி, தமிழ் புலிகள், புரட்சிகர இளைஞர் முன்னணி என 20க்கும் மேற்பட்ட  அமைப்பினர் பங்கேற்றனர்.
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துனை பொது செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, திராவிடத் தமிழர் கட்சியின் தலைவரும், போராட்ட ஒருங்கினைப்பாளருமான வழக்கறிஞர் சி.வெண்மணி,  தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் அஷ்ரப் அலி மற்றும் மலரவன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
முன்னதாக பி.ஆர்.நடராஜன் எம்.பி., செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை மாநகர பகுதியில் பல்வேறு தலைவர்களுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், டாக்டர் அம்பேத்கருக்கு சிலை அமைக்காமல் காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல. உடனடியாக சிலை அமைக்க வேண்டும் என்றார்.
முன்னதாக வடகோவையில் உள்ள இந்திய உணவு கிடங்கில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
இதுபோன்று இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியதை செலுத்தப்பட்டது. இதில் சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், நிர்வாகிகள் கே.மனோகரன், ராஜன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

;