சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு தனியார் மருத்துவமனையில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரியும், எலும்பு, பல் மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கான 4 வளாகங்களும் அமைந்துள்ளன.
மருத்துவமனையின் மூன்றாவது வளாகத்தில் உள்ள இரண்டாவது தளத்தில் மருந்து பொருட்கள் மற்றும் உபகரணங்கள் சேமிப்பு அறை உள்ளது. இந்த அறையில், இன்று அதிகாலை 4.15 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டவுடன், அந்த தளத்தில் ஒரு அறையில் இருந்த 30க்கும் மேற்பட்ட நோயாளிகள் வேறு அறைக்கு உடனடியாக மாற்றப்பட்டனர். சில நிமிடங்களில் தீ மளமளவென பரவி இரண்டாவது தளத்தின் முகப்பில் கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.
தீவிபத்து குறித்து தகவல் அறிந்து சிறுசேரி மற்றும் மறைமலைநகர் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த விபத்தில் இரண்டாவது தளத்தின் முகப்பில் இருந்த கண்ணாடிகள் முழுவதும் சேதம் அடைந்தன. ஆனால் நல்வாய்ப்பாக தீ விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாகக் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து காவல் துறையினர் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.