states

img

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 4 பேர் உயிரிழப்பு!

மணிப்பூரில் தெளபால் மாவட்டத்தில் நேற்று திடீரென மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்து, 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்ததை அடுத்து, தௌபால் மற்றும் இம்பால் மாவட்டங்களில் நேற்று மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது மணிப்பூர் அரசு.

நேற்று மாலை தௌபால் மாவட்டத்தில் உள்ள லிலாங் பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய குற்றவாளிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் வெடித்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களது உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

வன்முறையைத் தொடர்ந்து, தௌபால் மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாலும், அசம்பாவித சம்பவங்கள் மற்றும் உயிர் மற்றும் சொத்து சேதங்களைத் தடுக்கும் வகையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 2023 டிசம்பர் 31 ஆம் தேதியன்று விதிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு உத்தரவு ரத்து செய்யப்பட்டு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இம்பால் மேற்கு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உடனடியாக ஊரடங்கு அமலுக்கு வரும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று இம்பால் மேற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் முதலமைச்சர் என் பிரேன் சிங், ஒரு வீடியோ செய்தியில், லிலாங்கில் வசிப்பவர்களிடம் "இனி வன்முறையை ஏற்படுத்த வேண்டாம்" என்றும், அப்பகுதியில் அமைதியை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

மேலும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

"இந்த சம்பவத்தை மாநில அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது. குற்றவாளிகளைக் கைது செய்ய அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்படுவார்கள்," என்று அவர் கூறினார்.