மும்பையில் 20 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் காயம் அடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள காந்தி மருத்துவமனை எதிரே கமலா கட்டடத்தில் காலை 7 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. 20 மாடி கொண்ட கட்டடத்தில் 17, 18-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 13 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த கட்டிடத்தில் 3ம் நிலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகேவுள்ள பாட்டியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 15 பேரில் 12 பேர் பொதுப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்ற மூன்று பேருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.