states

img

பெண்கள் நடத்திய விவசாயிகள் நாடாளுமன்றம் 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கு சட்டம் நிறைவேற்றம்

பெண்கள் நடத்திய விவசாயிகள் நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதிகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் ஒதுக்கி சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற வீதியில் “விவசாயிகள் நாடாளுமன்றம்” கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் முழுமையாக பெண்களே பங்கேற்றார்கள்.

விவசாயிகள் போராட்டத்தில் உயிர்நீத்த ரமேஷ் என்பவரின் துணைவியார் இன்றைய பெண்கள் நடத்திய நாடாளுமன்றத்தில் முன்னணிப் பாத்திரம் வகித்தார். தன் சொந்த இழப்புகளைப் பொருட்படுத்தாமல் இதில் பங்கேற்றார். இவரைப் போன்றே பஞ்சாப்பில் துணைப் பேராசிரியராக இருப்பவரும், ராணுவ அதிகாரியின் துணைவியாரும், ஹர்யானாவில் உள்ள தங்கள் கிராமத்தில் பெண்களை அதிகாரமுள்ளவர்களாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பவருமான அமன்தீப் கவுர் சாந்து, பங்கேற்றார். இவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்  நாட்டிற்கு கார்ப்பரேட்டுகளின் அரசியல் தரகர்களால் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கும் பெண்களுக்கும் எதிரானவைகளாகும். எனவேதான் இதற்கெதிரான போராட்டத்தில் ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானமாகக் கலந்துகொண்டிருக்கிறோம் என்றார்.  எனவேதான் இங்கே பங்கேற்றிருக்கிற பெண்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக மட்டுமல்லாமல், விவசாயிகளின் போரிக்கைகளுக்காகவும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

பெயர் கூற விரும்பாத ஒரு ராணுவ அதிகாரியின் மனைவி, “நான் ஒரு ராணுவ வீரரின் மனைவி. எனினும் இன்றையதினம் விவசாயிகளுக்கும், நாட்டிற்கும் இப்போதைய ஆட்சியாளர்களால் ஏற்பட்டிருக்கும் ஆபத்துக்களிலிருந்து நாட்டையும், நாட்டு மக்கள் அனைவரையும் காப்பாற்ற பெண்கள் அனைவரும் இந்த இயக்கத்தில் முழுமையாகப் பங்கேற்க வேண்டும்,” என்றார்.

பெண்கள் நடத்திய விவசாயிகள் நாடாளுமன்றத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களான சுபாஷினி அலி, ஜகமதி சங்வான், இந்திய மகளிர் தேசிய சம்மேளனத்தின் தலைவர்களில் ஒருவரான அனி ராஜா, சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர்  முதலானவர்களும் பங்கேற்று உரையாற்றினார்கள்.

தீர்மானம்

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக மக்களவையில் சட்டம் நிறைவேற்றப்பட இதுவே சரியான தருணம் என்று இது தொடர்பான விவாதத்தின்போது பேசுகையில் அனி ராஜா கூறினார். அதேபோன்று சங்வான் பேசுகையில் பெண்களின் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பிட பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு அவசியம் என்றார்.

“பொதுவாக சமூகத்தில் பெண்களுக்கு எங்கேயுமே உரிமைகள் கிடையாது. விவசாயக் கணவன் இறந்துவிட்டால் அவர் பெற்ற கடனை அவருதுடைய விதவை மனைவி கட்டியாக வேண்டும். ஆனால் அவருக்குக் கடன் பெறுவதற்கான அனுமதி கிடையாது” என்று அவர் மேலும் கூறினார்.

பெண்கள் நடத்திடும் விவசாயிகள் நாடாளுமன்றத்திற்கு அண்டை மாநிலங்களிலிருந்து பெண்கள் திரளாக வர முயற்சிகள் மேற்கொண்டனர். எனினும் காவல்துறையினர் வழிகளிலேயே அவர்களைத் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர்.

(ந.நி.)

;