கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் இழப்பீட்டுத்தொகையை அதிகரித்திட வேண்டியது அவசியமாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் பேசினார்.
துணை மான்யக் கோரிக்கையின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் பேசியதாவது: ஒன்றிய அரசு, விவசாயிகளுக்குச் சிறந்தமுறையில் குறைந்தபட்ச ஆதார விலை கொடுப்பதற்கான முன்முயற்சிகள் எதையும் எடுக்கவில்லை. விவசாயத் துறையில் உயர்மட்ட ஆராய்ச்சிக்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. எனினும் இன்றைய தினம் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயக் குடும்பத்திற்கு இதிலிருந்து எந்த நிதி உதவியும் வழங்கப்படவில்லை. நாட்டில் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை அளிப்போம் என்று அரசாங்கம் உறுதிமொழி அளித்திருந்தபோதிலும், ஒருசில லட்சம் வேலைகள்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது. அநேகமாக அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயர்ந்திருக்கின்றன. ஒன்றிய அரசாங்கம், ஒன்றிய அரசின் கீழான திட்டங்களுக்கு நிதி அளித்திடும் முறையை மாற்றியமைத்திருக்கிறது. இதன் காரணமாக மாநில அரசாங்கங்கள் மேலும் நிதிச் சுமையால் திண்டாடிக் கொண்டிருக்கின்றன. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழான ஒதுக்கீடு கணிசமான அளவிற்கு உயர்த்தப்பட வேண்டியது அவசியம். அப்போதுதான், இத்திட்டத்தின்கீழ் வேலை செய்து இன்னமும் வழங்கப்படாத தொழிலாளர்களுக்கு இருந்துவரும் நிலுவைத் தொகைகளை அளித்திட முடியும். மேலும், தில்லியில் காற்றைத் தரப்படுத்துவதற்கான நிதித் தேவையும் இத்துணை மான்யத்தில் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்றே மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகத்திற்கும், அயல் விவகாரங்கள் துறை அமைச்சகத்திற்கும் அற்ப அளவிலேயே நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் இழப்பீட்டுத்தொகை அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இவ்வாறு பி.ஆர். நடராஜன் பேசினார்.
(ந.நி.)