states

img

24 நிமிடத்தில் முடிந்தது புதுச்சேரி சட்டமன்ற கூட்டம்

புதுச்சேரி, பிப். 3- புதுச்சேரி சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கிய 24 நிமிடத்திலேயே காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. சட்டப்பேரவையை 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதியாகும். இதன்படி 6 மாத காலம் முடிவடைய உள்ளதால் புதுச்சேரி சட்டப்பேரவை வெள்ளியன்று(பிப்.3) காலை 9.30 மணிக்கு கூட்டப்பட்டது. இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் குறிப்பை பேரவைத் தலைவர் செல்வம் வாசித்தார். அதனை தொடர்ந்து உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
வெளிநடப்பு
அதனைத் தொடர்ந்து தனியார் பாதுகாப்பு முகமைகள் குறித்து ஏடுகளை அமைச்சர் நமச்சிவாயம் தாக்கல் செய்தார். அப்போது திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாததை கண்டித்து அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அதனைத் தொடர்ந்து பேசிய எதிர்கட்சித் தலைவர் சிவா,“ மாநில அந்தஸ்து விவகாரம் பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டாக என்.ஆர்.காங்கிரஸ்,பாஜக கூட்டணி அரசு எதையும் செய்யவில்லை என்றும் தனக்கு பிரச்சினை ஏற்படும் போது மட்டுமே மாநில அந்தஸ்தை முதலமைச்சர் கையில் எடுத்துக் கொள்கிறார். உண்மையில் மாநில அந்தஸ்து தேவை என்றால் இந்த அவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆனால், முதல்வர் விளக்கம் அளிக்காததைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர்கள் அனைவரும் பேரவையிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். இதற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். சட்ட முன்வரைவுகளுக்கு இசைவு, அமைச்சர்களின் துறைவாரியாக கூடுதல் செலவின மதிப்பீடு அறிக்கை தாக்கல் முடிந்ததும், துணை கொடை கோரிக்கைகள் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் செல்வம், கூட்டத்தை காலவரையின்றி ஒத்தி வைத்தார்.
பள்ளி சீருடைகளுடன்
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் சீருடைகளை விரைவில் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் முன்னதாக திமுக எம்.எல்.ஏ.க்கள் சைக்கிளில் வந்தனர். மேலும் பள்ளி மாணவர்கள் போல் புத்தக பையை தோளில் தொங்கவிட்டு வந்தது கவனத்தை ஈர்த்தது.