புதுச்சேரி ஏப். 19- இந்தி மொழி திணிப்பை கண்டித்து புதுச்சேரி மாநிலத்தில் புதுவை நகரம், உழவர்கரை, மண்ணாடிப்பட்டு, பாகூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தி மொழியை மாநிலங்களில் கட்டாயமாக திணிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு கட்டாய நுழைவுத் தேர்வு கொண்டு வருவதை ரத்து செய்ய வேண்டும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ளூர் மாணவர்களுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. வில்லியனூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வில்லியனூர் நெட்டப்பாக்கம் கமிட்டி செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், மூத்த தோழர்கள் நடராஜன், முருகையன் உள்ளிட்டோர் பேசினர்.