காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரம் இல்லாததுதான் கர்நாடக மக்கள் தொகை அதிகரிக்கக் காரணம்! ஒன்றிய பாஜக அமைச்சர் பிரகலாத் ஜோஷி ‘புதிய’ தகவல் பெங்களூரு, மார்ச் 10 - கர்நாடக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன்பிருந்தே பிரச்சாரக் களம் சூடுபிடித்து விட்டது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசிவருகின்றனர். மக்களைக் கவருவதற்காக, கர்நாடகாவில் ராமர் கோயில் கட்டப்படும் என பாஜக அறிவித்த நிலையில், 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரசின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்தான் ஒன்றிய பாஜக அரசின் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கர்நாடகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுப் பேசியுள்ளார். அப்போது, “மாநிலத்தில் இப்போது, இலவச மின்சாரம் தருவதாக காங்கிரஸ் கூறுகிறது. இலவச மின்சாரம் தருவார்கள் என்று நம்புகிறீர்களா? இதற்கு முன்பு அவர்கள் ஆட்சிக் காலத்தின்போது மின்சாரமே கொடுக்காதவர்கள்தான் காங்கிரஸ் கட்சியினர். அவர்கள் ஆட்சியில் கிராமங்களில் மின்சாரமே இருந்ததில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மின்சாரம் இல்லாமல் போனதுதான், கர்நாட கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பிற்கே காரணமானது. ஆனால், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, எங்களால் (பாஜக) 24 மணி நேரமும் மின்சாரம் கொடுக்க முடிந்துள்ளது” என்று கூறியுள் ளார். இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.