states

அதானியின் ஊழல் முறைகேடுகளை விசாரிக்க ‘செபி’க்கு உச்சநீதிமன்றம் 3 மாதம் அவகாசம்!

புதுதில்லி, மே 17 -  அதானி நிறுவனங்கள் மீது ஹிண்டன்பர்க் சுமத்திய குற்றச்சாட்டுகளை விசாரிக்க, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான ‘செபி’ (SEBI)-க்கு 3 மாதகால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதானி குழுமம் ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் முறைகேடு செய்துள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ என்ற ஆராய்ச்சி நிறுவனம் கடந்த ஜனவரி அறிக்கை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, அதானியின் இந்த ஊழல் முறைகேடுகள் குறித்த, ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை இரண்டு மாதங்களுக்குள் விசாரிக்குமாறு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (SEBI) கடந்த மார்ச் 2-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதானி குழுமம் தொடர்பான ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கையின் பின்னணியில், “பத்திர ஒப்பந்த ஒழுங்குமுறை விதி 19(a) மீறப்பட்டுள்ளதா; ஏற்கெனவே உள்ள சட்டங்களுக்கு முரணாக பங்கு விலைகளில் ஏதேனும் கையாளுதல் செய்யப்பட்டு உள்ளதா?” என ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு கூறியிருந்தது.  இந்நிலையில்தான், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான (செபி), “விஷயத்தின் சிக்கல் தன்மை” மற்றும் “நீதியின் முக்கியத்துவத்தை” குறிப்பிட்டு, “ஹிண்டன்பர்க் சுமத்திய மோசடி மற்றும் பங்குச் சூழ்ச்சி குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை முடிக்க குறைந்தது 6 மாத கால அவகாச  நீட்டிப்பு வழங்க வேண்டும்” என்று கடந்த ஏப்ரல் 29 அன்று மனுத்தாக்கல் செய்தது. “அதானி குழுமம் தொடர்பாக, எங்களால் அளிக்கப்பட வேண்டிய அறிக்கை நியாயமானதாகவும், சரியானதாகவும் இருக்க வேண்டும். அதானி குழும விவகாரத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் 12 பரிவர்த்தனைகள் மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. இந்த பரிவர்த்தனைகளின் கீழ் பல்வேறு துணைப் பரிவர்த்தனைகள் இருப்பதால், இவற்றை விசாரிக்க பல்வேறு தகவல்களை சேகரிக்க வேண்டும் என்பதாலும், அதானி விவகாரத்தை விசாரிக்க இன்னும் 6 மாதங்கள் வேண்டும்” என ‘செபி’ கூறியிருந்தது.

அதானி குழும முறைகேடுகள் தொடர்பாக, 2016-ஆம் ஆண்டு முதலே செபி விசாரணை நடத்தி வந்தது என்று சில மனுதாரர்கள் கூறியிருந்த தகவலை, உச்ச நீதிமன்ற விசாரணையின்போது ‘செபி’ மறுத்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை, உலகளாவிய வைப்புத்தொகை ரசீது (Depository Receipts) வழங்கியது குறித்து விசாரணை நடத்தப்பட்ட 51 நிறுவனங்களில், அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட எந்த நிறுவனமும் இடம்பெறவில்லை. எனவே,  ஹிண்டன்பர்க் விவகாரத்தில் முன்கூட்டிய மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்றும் நீதிபதிகளிடம் ‘மிகுந்த கவனத்துடன்’ கேட்டுக் கொண்டது. இதனிடையே புதனன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க, 6 மாதங்கள் வழங்க முடியாது. செபி காலவரையின்றி நீண்ட காலம் எடுக்க முடியாது, 3 மாதங்கள் அவகாசம் தருகிறோம்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.